உலகத் தமிழ்க் கலை இலக்கிய மாநாடு,
மட்டக்களப்பு – இலங்கை
2-3, ஆகஸ்ட் 2024
உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டக்களப்பில் ஆகஸ்ட் 2 – 3 ஆகிய நாட்களில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து இந்த உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாட்டினை நடத்தியது.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக, கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர். விழாவில் மட்டக்களப்பில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு தொடர்பான மலர் வெளியிடப்பட்டதுடன் மட்டக்களப்பு ஆய்வு நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாட்டைக் குறிக்கும் வகையில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் முத்திரையொன்றும் இதன்போது வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.












ஆய்வாளர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக மாநாடுகள் அமைகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு 2024 வரலாற்றுச் சிறப்பிடம் பெறத்தக்க ஒரு நிகழ்வாக நடந்து முடிந்திருக்கின்றது.
இந்த மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற ஆர்வம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரு செந்தில் தொண்டமான் அவர்களுக்கு எழுந்ததும், அதன் தொடர்பாக அவரது ஜூலை இரண்டாம் வாரத்தில் ஜெர்மனிக்கான வருகையின் போது என்னுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இது மேலும் உறுதி பெற்றது. மிகக் குறுகிய காலமே இருக்கின்றதே.. எப்படிச் செய்து முடிப்பது… என்று பல ஐயங்கள் இருந்தாலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதனை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதி, இந்த மாநாட்டை இன்று வெற்றிகரமாக முடித்து இருக்கின்றது.
இந்த மாநாட்டின் தலைவராக என்னை நியமித்து அதிகாரப்பூர்வக் கடிதமும் வழங்கிய போது எப்படி இதனைச் சாத்தியப்படுத்த முடியும் என்ற யோசனை எழுந்தது.
மட்டக்களப்பின் ஆய்வாளர்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் தமிழுக்கும் வரலாற்றுக்கும் சமூகவியல் ஆய்வுகளுக்கும் பங்காற்றிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையும் இதில் இணைக்க வேண்டும் என்று எண்ணம் எழுந்த போது மட்டக்களப்பு ஆய்வாளர்களைப் பட்டியலிட்டு பொருத்தமான பெயர்களை வழங்க பேராசிரியர் மௌனகுரு அவர்களது உதவியை நாடினேன்.
அதுமட்டுமின்றி எனது ஜனவரி மாத மட்டக்களப்பு பயணத்தின் போது பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் கலாநிதி குணபாலசிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்ட போது இந்த நிகழ்ச்சிக்கான பல்வேறு அமர்வுகளுக்குப் பொருத்தமான ஆய்வாளர்களின் பட்டியல்களை அவர் பெரும் முயற்சி மேற்கொண்டு தொகுத்து எனக்கு வழங்கினார். பெயர்களை வழங்கியதோடு மட்டுமின்றி இந்தக் கருத்தரங்கு வெற்றிகரமான ஒரு கருத்தரங்காக உருவாக வேண்டும் என்று தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தொலைபேசி தொடர்பிலிருந்து எனக்கு இலங்கை தொடர்பான ஆய்வாளர்களை ஒருங்கிணைப்பதிலும் தொடர்பு கொள்வதிலும் மிகப்பெரிய அளவில் உதவிகளைச் செய்தவர் பேராசிரியர் குணபாலசிங்கம் அவர்கள். அவரது ஈடுபாடும் உழைப்பும் நான் இந்த மாநாட்டை விரைந்து ஏற்பாடு செய்வதற்குப் பெரும் உதவியாக அமைந்தது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவினர் குறிப்பாக, செயலாளர் முனைவர் தேமொழி, பேராசிரியர் பாப்பா, பேராசிரியர் இறைவாணி, திருவாளர்கள் நாணா, கிருஷ்ணகுமார் ஆகியோர் பல்வேறு பணிகளைப் பொறுப்பில் எடுத்துக்கொண்டு இந்த மாநாட்டைச் சிறப்புடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக உழைத்தனர். திரு கீர்த்திவர்மன், முனைவர் சிவ. இளங்கோ, திரு ஒளிவண்ணன் போன்றோர் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் உதவியது.
மாநாட்டின் அமர்வுகள் மட்டுமின்றி இலங்கையின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பலரையும் சிறப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் தனது விருப்பத்தைத் தெரிவித்த போது தமிழ் மொழி வரலாறு சமூகவியல் எனப் பல்வேறு வகையில் தொண்டாற்றிய பெருந்தகைகளுக்குச் சிறப்பு செய்யும் பொருட்டு அவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்தோம். அவர்களது பணியும் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய தொண்டையும் ஆவணப்படுத்தும் வகையில் மாநாட்டு மலரில் அவர்களது பங்களிப்பைப் பற்றிய குறிப்புகளையும் இணைத்து மாநாட்டு மலரைத் தயாரித்தோம்.
இந்த மாநாட்டின் முக்கிய அங்கமாக மட்டக்களப்பு பற்றிய ஒரு வரலாற்று ஆய்வு நூலையும் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக இதனை மெருகேற்றினோம்.

இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆளுநர் தனது முயற்சியின் வழியாக இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியாக உருவாக்கும் வகையில் மாநாட்டைச் சிறப்பித்து அஞ்சல் தலை ஒன்றை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
இந்த மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியாக திருவள்ளுவர் சிலை ஒன்றை நிறுவி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒற்றை பாலமாக இருக்கும் திருக்குறளுக்குச் சிறப்பு சேர்த்தோம்.
இந்தப் பெருமைமிகு நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் மாணவர்கள் ஊர்வலமாக வந்தது மட்டக்களப்பு நகரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஓவியர் குல ராஜா அவர்களது ஓவியத்தைக் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு கண்காட்சி இந்த நிகழ்ச்சியில் இணைந்தது.
மாநாட்டின் கருத்தரங்க அமர்வுகளைச் சிறந்த முறையில் நிகழ்த்தும் வகையில் இறுதி நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இரண்டாம் நாள் அனைத்து அமர்வுகளையும் பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்துவதற்குச் சம்மதம் தெரிவித்து அதற்கான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு நல்கி உதவியதை இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து பல ஆய்வாளர்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மிகுந்த ஆர்வத்துடன் பல ஆய்வாளர்களும் வந்திருந்தார்கள். குறுகிய கால ஏற்பாடாக இருந்த போதிலும் கிழக்கு மாகாண அரசின் அலுவலர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்துக் கொண்ட பொறுப்பை இரவு பகலாக உழைத்து இந்த மாநாடு சிறக்க வேண்டும் என்று தங்கள் உழைப்பை வழங்கியிருந்தனர். குறிப்பாக, திருமிகு சுஜாதா அவர்கள், திருமிகு சிவலிங்கம் அவர்கள், திருமிகு நவநீதன் அவர்கள், திருமிகு பாபு அவர்கள் ஆகியோரது உதவியும் பங்களிப்பும் இந்த மாநாட்டை நல்ல முறையில் நடத்த உதவியது.
மாநாட்டு முதல் நாள் தொடக்கம் மட்டக்களப்பு நகர் விழாக்கோலம் கொண்டிருந்தது. பொது மக்களிடையே இது மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது என்பதை அவர்கள் ஆர்வத்தோடு சாலையின் ஓரத்தில் நின்று நிகழ்ச்சிகளைக் கவனித்ததையும் இணைந்து கொண்டதையும் அமர்வுகளில் நேரில் வந்து பங்கெடுத்துக் கொண்டதையும் பார்த்தபோது உணர முடிந்தது.
ஒரு மாபெரும் தமிழ் கலை இலக்கிய மாநாட்டினை இலங்கையில் நடத்தி முடித்து இருக்கின்றோம். இது ஒரு முறை மட்டுமே நடக்கின்ற ஒரு நிகழ்வாக அல்லாமல் ஆண்டுதோறும் இலங்கை வாழ் மக்களையும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக அமைவதற்கான அனைத்து முயற்சிகளையும் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம்.
ஒரு மாநாடு அல்லது கருத்தரங்கம் அல்லது ஒரு நிகழ்ச்சி என்பது ஏற்பாடு செய்யப்படும்போது அதில் குறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவது இயல்பு. இந்த மாநாட்டில் ஏற்பட்ட சிற்சில அத்தகைய குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து அடுத்த ஆண்டில் மேலும் சிறப்பாக இம்மாநாட்டினை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இந்த மாநாட்டிற்குப் பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் இருக்கின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் 1500 நூல்களை மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு வழங்கி இருக்கின்றோம் என்பது இந்த மாநாட்டை ஒட்டி நாம் நிகழ்த்தியிருக்கும் ஒரு சாதனை. இது மட்டக்களப்பு வாழ் பொது மக்களின் நலனுக்கு உதவும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
மட்டக்களப்பு நகரிலிருந்து புறப்பட்டு வரும்போது பிரிய மனமில்லாமல் அனைவரும் புறப்பட்டோம்.
இந்த மாநாடு இதில் பங்கேற்ற நம் ஒவ்வொருவர் மனதிலும் பசுமையாக நிலை கொண்டிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ் மொழி வரலாறு பண்பாடு கலை ஆகிய துறைகளில் சிறந்த முறையில் அவற்றை முன்னெடுக்கும் முயற்சிகளில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அடுத்த தலைமுறை நலன் பெற நம்மால் ஆன அனைத்துச் செயல்களையும் செய்வோம். வரலாற்றை ஆவணப்படுத்துவோம்.
தமிழால் ஒன்றிணைவோம்!
முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
10.8.2024
“கருத்தரங்கம்” தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் புதிது அல்ல. 2006 ல் கொரியாவிலிருந்து என்று நான் மின்தமிழ் எனும் கூகுள் மடலாடற்குழுவைத் தொடங்கினேனோ அன்றிலிருந்து தமிழ் மரபு அறக்கட்டளை கருத்துகளின் அரங்கமாகவே செயல்படத்துவங்கியது. உதாரணமாக கொரியத் தமிழ் தொடர்புகள் பற்றிய விவாதக் களமாக மின்தமிழ் திகழ்ந்தது. எத்தனையோ ஆய்வுப்பொருட்கள் அங்குண்டு. தேடினால் கிடைக்கும். செம்மொழி மாநாடு பற்றி நான் எழுதிய பதிவுகளும் அதற்கான எதிர்வினையும் ஒரு நூலாக விரைவில் வரப்போகிறது. நீங்களும் தேடித்தொகுத்து நூல்களைக் கொண்டு வரலாம்.
கருத்தரங்கம் எனும் பொதுப்புரிதலுள்ள அமர்வுகளையும் தமஅ நடத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தமிழன் சோர்ந்துவிடக்கூடாது என ஆரம்பிக்கப்பட்டதுதான் “திசைக்கூடல்” எனும் மெய்நிகர் நிகழ்ச்சிகள். இதில் ஆளுமைகளின் தனிப்பட்ட பேச்சுக்கள் என்றில்லாமல், ஒரு நாள், இரு நாள் கருத்தரங்கங்களும் வெவ்வேறு தலைப்புகளில் நடைபெற்றுள்ளன. அப்படி சமீபத்தில் (ஏப்ரல் 20 & 21, 2024) நடைபெற்ற கருத்தரங்கம்தான், “மட்டக்களப்பு: வரலாறு, சமூகம், பண்பாடு”. பேரா.மௌனகுரு அவர்களின் பங்கேற்புடன் நடந்த இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை த.ம.அ ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.








இதையடுத்து வருவதுதான் ஆகஸ்டு 2-3, 2024 நடைபெற்று முடிந்துள்ள “உலகத்தமிழ் கலை இலக்கிய மாநாடு”. இது மெய்நிகராக அமையாமல் மெய்யாகவே நடந்த மாநாடு. இவ்விரு மாநாடுகளுக்கும் உறுதுணையாக நின்றவர், கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் அவர்கள். இதுவரை நடந்திராத அளவில் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து நடத்திக் காட்டியிருக்கிறார் ஆளுநர். இவ்விரு மாநாடுகளையுமே தமிழ் மரபு அறக்கட்டளை தலைமையேற்று நடத்த வேண்டுமென்ற அவரின் வேண்டுகோளை ஏற்று இரவு பகல் பார்க்காமல், கண்ணுறக்கம் பாராமல் செயல்பட்டவர் த.ம.அ வின் தலைவர் டாக்டர் சுபாஷிணி கனகசுந்தரம் அவர்கள். இதில் அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்படுத்திய பலரில் குறிப்பிடத் தக்கவர்கள் டாக்டர் பாப்பா, டாக்டர் இறைவாணி, டாக்டர் கௌதம சன்னா, டாக்டர் ஒளிவண்ணன், சிலம்பர். கிருஷ், எழுத்தோவியர் நாணா போன்றோர்.
இதுவரை நடந்துள்ள தமிழ் மாநாடுகள் போலவே ஊர்வலம், கலைகளின் வெளிப்பாடு எனக் கல்விசார் கருத்தரங்கமாக கிழக்கு பல்கலைக் கழகத்தில் இம்மாநாடு நடைபெற்றது. சுபாவின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கல்விசார் பேராளர்கள் ஆளுநரால் கௌரவிக்கப்பட்டனர்.
1. பேராசிரியர் சி.மௌனகுரு & பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
மேனாள் பீடாதிபதி, கலைகலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம் (மட்டக்களப்பு)
2. பேராசிரியர் சி.பத்மநாதன்,
பொறுப்பு வேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (கொழும்பு)
3. தகைசால் பேராசிரியர்கள் அ.சண்முகதாஸ் & ச.மனோன்மணி
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (திருகோணமலை )
4. திருமிகு சா. திரிவேணி சங்கமம்,
மொழிபெயர்ப்பாளர், காரைத்தீவு (அம்பாறை)
5. பேராசிரியர் முனைவர் பரமு. புஷ்பரட்ணம்
மேனாள் தொல்லியல் மற்றும் வரலாற்றுத்துறைத் தலைவர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் (யாழ்ப்பாணம்)
6. திருமிகு ஈஸ்வரராஜா குலராஜா,
ஓவியர் (மட்டக்களப்பு)
7. முனைவர் தம்மிக்க ஜயசிங்க,
முதுநிலை விரிவுரையாளர், சிங்களத்துறை, றுகுணு பல்கலைக்கழகம் (மாத்தறை).
8. திருமிகு சுப்பையா ராஜசேகரன்,
ஆவணப் பாதுகாப்பகம் (நுவரெலியா)
9. பேராசிரியர் த.ஜெயசிங்கம்,
மேனாள் துணைவேந்தர், தகைசால் பேராசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகம் (மட்டக்களப்பு)
10. முனைவர் சா.தில்லைநாதன்,
ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர், (மட்டக்களப்பு)
11. பேராசிரியர் ஏ.எஸ். சந்திர போஸ்,
மேனாள் பீடாதிபதி. இலங்கை திறந்தபல்கலைக்கழகம் (நுவரெலியா)
12. முனைவர் இராசையா மகேஸ்வரன்
கல்விசார் பிரதம நூலகர், பேராதனைப் பல்கலைக்கழகம் (கண்டி).
13. திருமிகு. தம்பிராசா தவக்குமார்,
சமூக சேவையாளர், காரைத்தீவு (அம்பாறை)
14. முனைவர் பக்தவச்சல பாரதி,
மேனாள் இயக்குநர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, இந்தியா
15. முனைவர் க.சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை, பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி).
ஒரு மாநாட்டிற்கு ஓர் அரசு தபால்தலை வெளியிடுகிறது என்றால் அது எத்தகைய சிறப்பு மிக்கதாய் இருக்க வேண்டும்? மொத்தத்தில் இம்மாநாடு த.ம.அ வின் மகுடத்தில் இன்னுமோர் மணி.
முனைவர் நா. கண்ணன்
துணைத்தலைவர், இணைத் தோற்றுநர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக முனைவர் சுபாஷிணி அவர்கள் தலைமையில் இலங்கை சென்ற குழு, அங்கு ஆக்கப்பூர்வமான சில பணிகளைச் செய்து திரும்பியது. அவற்றை மக்கள் மத்தியில் பகிர்வது அவசியமானதுதான். அவை;
1) இலங்கையின் முக்கியமான நெடுஞ்சாலையின் சந்திப்பில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கிடையே திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியை நடத்தியது தமிழ் மரபு அறக்கட்டளை. முனைவர் சுபாஷிணி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை அலங்கரிக்க, திருவள்ளுவர் யார் என்ற நூலை எழுதிப் புகழ் பெற்ற வழக்கறிஞர் கௌதம் சன்னா அவர்கள் தலைமையேற்க, கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் அவர்கள், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்த நிகழ்வானது, கலந்து கொண்ட இலங்கை மக்கள் பலராலும் பாராட்டப்பட்ட நிகழ்வாய்த் திகழ்ந்தது.
2) தமிழ் மரபு அறக்கட்டளைக் குழு நிறுவனர் சுபாஷிணி, அங்குக் கட்டப்பட்டு வரும் புதிய நூலகத்திற்காக இங்கிருந்து கொண்டு சென்ற 1000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆளுநர் வசம் குழுவினருடன் இணைந்து ஒப்படைத்தார் (நான் எழுதி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட , “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற 3 புத்தகங்களும் இத்துடன் சேர்க்கப்பட்டன.) மட்டக்களப்பில் உள்ள நூலகம், புதிய நூலகத்திற்கு மாறவிருக்கிறது. ஆளுநர் கேட்டுக் கொண்டபடி, நாங்கள் பழைய நூலகத்தையும், புதிதாகக் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் புதிய நூலகத்தையும் பார்வையிட்டோம். அதன் படங்களைப் பகிர்ந்துள்ளேன். புதிய நூலகம் மிக அழகிய கட்டடக்கலை அமைப்புடன் மிகப் பெரிதாக ஓர் அரண்மனைபோல் தோற்றமளிக்கிறது. எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில் கடற்கரை ஓரமாகக் கட்டப் பட்டு வருகிறது. அங்குச் சென்ற குழு பார்வையிட்டு மகிழ்ந்தது.
3) கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தில் மாணவர் மத்தியில் பல்வேறு ஆக்கப் பூர்வமான தலைப்பில் உரையாற்றினர் குழுவினர். சிலம்பாட்டம் பற்றிய சொற்பொழிவு, மாணவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, வெகுவாகக் கவர்ந்தது.
4) அறிஞர்கள் பலருக்கு அவர்கள் ஆற்றிய பணியைப் பாராட்டி விருதுகள் வழங்கியமையும் ஒரு கடமையுணர்ச்சியாய் மிளிர்ந்தது. கிழக்கு மாகாண ஆளுநரும், பல்கலைக் கழகத் துணை வேந்தரும் விருதுகள் வழங்கி பாராட்டி வாழ்த்தினர். தம்மை வருத்தி தம் ஆற்றலை வெளியுலகிற்குப் பயன்படுமாறு தந்து கொண்டிருப்பவர்களைப் பாராட்டுதல் என்பது ஒரு சரித்திர நிகழ்வு தானே. அப்படித்தான் அமைந்திருந்தது அன்று.
5) இத்தகைய பணிகளை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பும் போது, அறக்கட்டளை நிறுவனர் சுபாஷிணி, ஒரு யோசனையைத் தெரிவித்தார். அந்தப் பேருந்தில் ஓர் உரையாடலை அமைக்கலாம் என்பதுதான் அந்தப் பயனுள்ள யோசனை. வந்திருந்த குழுவினரில் பலர் நல்ல இலக்கிய வாதிகள். அதாவது தற்கால இலக்கியத் திறனாய்வு, விமர்சனம், கதை, கவிதை என்ற துறைகளில் வல்லுநர்கள். தங்கள் உரையாடலைத் தொடங்கினர். சுறுசுறுப்பான திறனாய்வும் விமர்சனமும், விறு விறு வென்று உச்சத்தில் ஏறிக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமான சூழலில் அனைவரும் திளைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் ஒரு தொல்லியல் ஆய்வாளர். அவரால் அந்த உரையாடலில் கலந்து கொள்ள முடியவில்லை. ரசிக்கத்தான் முடிந்தது. காரணம், பழைய கற்காலம், புதிய கற்காலம், கீழடி, போன்ற அகழாய்வுகள், சோழன்,பாண்டியன், பல்லவன், என்றால் அவர் மனநிலை சும்மா எகிறும். ஆனால் அப்போது இந்த உரையாடலை அவர் மனநிலை படுத்துக் கொண்டு ரசித்தது.



குழுவிலுள்ள நாணா என்ற கேமரா நிபுணர் நாராயணன் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று செயல் புரிந்து, அழகிய புகைப் படங்கள் எடுத்து அசத்தினார். அவர் எடுக்கும் படங்களை ஒரு தொழில்நுட்பக் கலை எனலாம். மறு நாள் கொழும்பிலிருந்து சென்னைத் திரும்பினோம்.
முனைவர் ஆ. பத்மாவதி
தொல்லியல் ஆய்வாளர்
ஆகஸ்ட் 21, 2024