பிரித்தானிய நூலகத்திலுள்ள தமிழ் புத்தகங்களை நகலெடுத்து, பின் மின்னூலாக்கி இங்கு இட்டுள்ளோம். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியாகும். இதன் மூலம் ஆங்கில ஆட்சியில் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் சென்ற புத்தகப் பிரதிகளை இப்போது பொது மக்கள் வாசிக்க வசதி செய்துள்ளோம். பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ்ச் சந்ததியினருக்கு தங்கள் முதுசொம் இன்னதென்று இனம் காட்டும் ஒரு முயற்சியாகும் இது.
முதல் முறையாக பிரித்தானிய நூலகத்தின் தமிழ் நூல்கள் வைய விரிவு வலையில் வாசிக்க வந்துள்ளன. இது எங்கள் முதல், சிறிய முயற்சி. இம்முயற்சிக்கு நிதியுதவி செய்தவர்கள் பிரித்தானிய லாட்டரியின் 'எல்லோருக்கும் விருது' குழுவினர் ஆவர். இந்தக் கன்னி முயற்சியில் பத்து நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை குறைந்தது நூறு வருடப் பழமை கொண்டவை. நிதி வசதி பெருகினால் மேலும் பல அரிய புத்தகங்களை இங்கிடத் திட்டமிட்டுள்ளோம்.
நகலெடுக்கப்பட்ட நூல்கள் மின்னாக்கம் பெற்று இலத்திரன் நூல்களாக பிடிஎப் வடிவில் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அடோப் ரீடர் கீழிறக்கம் செய்து இந்நூல்களை வாசித்து இன்புருங்கள்.
உலக அரங்கில் தமிழின் முதுசொம் காப்பகமாக தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பண்டைய அச்சு நூல்கள், பனையோலைகள், இசைப்பேழைகள், கூத்து வடிவங்கள் இங்கு மின்னிலக்க வடிவில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் எங்கள் சேவை பற்றி அறிய இங்கே சொடுக்குக!. இத்திட்டம் வளர்ச்சியுற உங்களாலான நிதி உதவி அல்லது தொழில் நுட்ப உதவி செய்ய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
லண்டன் வாழ் மருத்துவர் டாக்டர் தண்டபானி அவர்களின் அறக்கொடையில் தமிழக கோயில் தலபுராணங்கள் மின்னச்சு ஆகி வருகின்றன. இத்தொகுப்பு இத்தொடுப்பில் வாசிக்கக் கிடைக்கும்.