

|
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலா நிதி டாக்டர் உ,வே, சாமிநாதையர் அவர்கள் அன்புடன் அளித்த இப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண் பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு. சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய "காதலா கடமையா" என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஓவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய 'நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. பொது மக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன். ஆங்காங்குச் சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் உள்ளன. அவை அடுத்த பதிப்பில் நீக்கப்படுமென்று நம்புகிறேன்.
![]() முகவுரைபுதுக்கதைக்கு முகவுரை எழுதுவது பொதுமக்கட்கு சற்றுவியப்பை உண்டு பண்ணலாம். ஏனெனில், அம்முகவுரைகள் பெரும்பாலும் வாசகர்கட்கு குறிப்பிட்ட புத்தகத்தை ஆதரிக்கும்படி விண்ணப்பஞ் செய்து கொள்ளும் நோக்கத்தோடு எழுதப்படுபவை. புதுக்கதைக்கு (Novel) முகவுரை அவசியமில்லையென்பது உண்மையேயாயினும், அப்புத்தகம் எழுதும் ஆசிரியரின் நோக்கத்தை ஒரு சிறு அளவு அப்புத்தகத்தை வாசிக்கும் முன்பு, வாசகர்கள் அறிந்துகொள்ளுமாறு தெரியப்படுத்துவது இன்றியமையாததென்று இம்முகவுரையை வரையலானேன். சிறந்த அறிஞர் பலரால் எழுதப்படும் புத்தகங்கள், நாடோறும் பெருகிவரும் இந்நாளில், உயர்ந்த கல்வியைக் கற்காத மிகச் சிறிய அறிவையுடைய சிறுமியாகிய யான் புத்தகம் எழுதத் துணிவது பண்டித சகோதர சகோதரிகளிற் பலர்க்கு, எதிர்பாராத வியப்பினையும் திகைப்பினையும் உண்டுபண்ணலாம். ஆயினும் அப்பெரியார் இச்சிறு புத்தகம் எழுதும் நோக்கத்தை சிறிது ஆராய்ந்து, இதன்கண்ணுள்ள குற்றங்களைப்பொறுத்தாதரிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். பழம்பெருமை வாய்ந்த நமது இந்தியநாடு, சரித்திர ஆரம்பகாலத்து, மிகவுயர்ந்த நாகரிகத்தின் உச்சியை அடைந்த திராவிடமக்களால் நம்மிந்திய நாடுமுற்றும் பரவியிருந்தது. ஆரியர்கள், இந்தியாவின் பெரும்பாகத்தைக் கைப்பற்றிய காலத்தும் திராவிட நாகரிகம் அழிக்கப்படவில்லை. அழகிற் சிறந்த ஆரியர்கள், திராவிடரின் நாகரிகத்தை கையாண்டு, அதை மென்மேலும் பெருகச் செய்தனர். நாகரிகத்திற்கு அதன் மொழியே சிறந்த வாகனமாதலின், பெரும்பாலும் அம்மொழியின் வளர்ச்சியினாலேயே, அந்நாகரிகத்தின் உயர்வைப்பற்றி சரித்திர அசிரியர்கள் அறிந்துகொள்ளுகின்றனர். எடுத்துக்காட்டாக உரோமநாட்டின் உயர்ந்த நாகரிகத்தின் பெருமையை லத்தீன்மொழி தௌ¤வாக வெளிப்படுத்துகின்றது. பழைய கிரேக்க நாகரிகத்தின் பெருமையை, மகாகவியாகிய ஹோமரின் (Homer) என்றும் அழிவில்லா காவியங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகின்றோம். அஃதேபோல், எமது தமிழ் நாட்டிலும் திருக்குறள், நாலடியார் முதலியவைகளிலிருந்து தமிழரின் தத்துவ ஞானத்தைப் பற்றியும் நல்லொழுக்கத்தைப் பற்றியும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவைகளிலிருந்து தமிழரின் நாகரிகத்தைப் பற்றியும் ஒருவாறு நாம் தெரிந்துகொள்ளுகின்றோம். ஆகவே, ஒரு மொழியை வளர்ப்பது, அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களின் கடமைகளில் ஒன்றாம். பண்டைக்காலத்து மொழிவளர்ச்சியானது மிகக் கற்றுணர்ந்த புலவர் பெருமக்களாற் செய்யப்பட்டுவந்தது. அரசர்களும், செல்வந்தர்களும் அக்கவிகளை ஆதரித்து ஊக்கமளித்து வந்தனர். அதனாலேயே தற்காலத்திலும் மிக உயர்ந்த நூற்களாய்ப் புகழ்தேத்தும் பல தமிழ்க் காவியங்களும் வெளியாயின. தமிழ் நாட்டின் தலை நகராய் ஒரு காலத்திற் சிறப்புற்றோங்கிய மதுரையும் பதியில், மூன்று காலங்களில் இருந்ததாகக் கூறப்படும் தமிழ்ச் சங்கத்தாலும் பல அறிவு நூல்கள் வெளியிடப்பட்டுவந்தன. அவையும் இலக்கண இலக்கியப் பயிற்சி உடையார்க்கே இனிது விளங்குந் தன்மையன. ஆதலின், யாவர்க்கும் எளிதில் விளங்கும்படி, தற்கால தமிழ்ப் பெரியார் பலர், தமது விடா முயற்சியினால் பல அறிவு நூல்களும், பொழுது போக்கிற்காக படிக்கக்கூடிய பல புதுக்கதைகளும் வெளியிட்டுள்ளனர், அப்பெரியார் தம் உயர்ந்த நூற்கள் சிலவற்றை யான் படித்தபொழுது, உரைநடையில், ஒரு சிறு புதுக்கதை எழுதவேண்டுமென்னும் விருப்பம் என்னை வெகு நாட்களாய்த் தூண்டியது. யான் பத்திரிகைகட்கு கட்டுரைகள் அடிக்கடி வரைந்தனுப்பியதைக் கண்ட என் உற்றார்உறவினரும், என் சினேகிதிகளும் அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டுமென்று பெரிதும் விரும்பினார், அன்னார் தம் விருப்பத்தையும், எனது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டியே இச்சிறு புத்தகத்தை வெளியிடுகின்றேன். எங்கள் விருப்பம் ஈடேறுமாறு அருள்பாலித்த எல்லாம் வல்ல இறைவனைத் துதிக்கின்றேன். இக்கதையில், தலைமகனாய்வரும் சுரேந்திரன் என்பான், கடமையின் பொருட்டு தன் வாழ்க்கையின்பத்தையே தியாகஞ் செய்கின்றான். கதா நாயகியாகிய விஜய சுந்தரி என்னும் மின்னாள். தங்கடமையினின்றும் வழுவிவிட எண்ணுங்காலை, உலகினில் உயிர்வாழ்வான் ஒவ்வொருவனும், எல்லாவற்றிலும் கடமையையே தன் வாழ்க்கையிற் பிரதானமாய்க் கொள்ளவேண்டுமெனச் சுரேந்திரன் எடுத்துக்காட்டுகின்றான். இக்கதையில் இன்னும் பல சிறந்த நீதிகளும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன, பொது மக்கள் இப்புத்தகத்தை ஆதரித்து, எனக்கு மேன் மேலும் ஊக்கத்து அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். இப்புத்தகத்தை அச்சிடுமாறு என்னைப் பலமுறையும் தூண்டிய என் உற்றார் உறவினர்கட்கும், தாய் நாட்டின் விடுதலைப் போரிற்கலந்து, சிறை சென்ற தேசபக்தரும், தற்போது தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக இருந்துவரும், எனது பாட்டனார் மு.யூ, நவாபு சாகிபு மரைக்காயர் அவர்கட்கும், நாகூர் வாசியும், பெரும்பாலும் சிங்கையில் வதிந்து பல பொதுத்தொண்டுகளில் ஈடுபட்டிருப்பவரும், பெண் மக்களின் முன்னேற்றத்திலும் தேனினுமினிய தமிழ் மொழியின் அபிவிருத்தியிலும் மிக்க ஆர்வமும். விடாமுயற்சியுமுள்ள சகோதரர் S. செய்யது அஹமது அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி என்றும் உரித்தாகுக. நச்சுடை சில நாகங்களைத் தனக்குக் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர் தம் தூற்றுதலுக் கஞ்சி, பத்திரிகைகட்கு பெயர் போடாது கட்டுரைகள் வரைந்தனுப்புமாறு அன்று என்னைத் தூண்டியவரும், இன்று தமது பச்சிளங்குழவிகளை பரிதவிக்கவிட்டு பரமனடி எய்தியவருமான எனது அரும்பெருஞ் சிற்றன்னையார் ஹதீஜா நாச்சியார்க்கு இப்புத்தகத்தை என் மனமார்ந்த பிரீதியுடனும் அனுதாபத்துடனும் அர்ப்பணஞ் செய்கின்றேன். அம்மாதரசியின் ஆத்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல இறைவனடி தொழுது வேண்டுகின்றேன்.
![]() பொருளடக்கமஅத்தியாயம்
1. சிறு குடும்பம் ![]() அத்தியாயம் 1 ஒரு சிறு குடும்பம் பாண்டிய நாட்டின் தலைநகராய் ஒரு காலத்தில் சிறப்புற்றோங்கிய மதுரையம்பதியில், ஒரு பகுதியின்கண், ஒரு சிறு குடும்பத்தார் நமது கதை நிகழுங்காலையில் வசித்து வந்தனர். விமலநாதன் என்பாரே இக்குடும்பத்தலைவர். சுரேந்திரநாதன் என்னும் அவர்தம் இளஞ்சகோதரனொருவனும். அவர் மனைவியொருத்தியுமே இக்குடும்பத்திலுள்ளவர்கள். இவர்கள் மாயாபுரியின் அரசகுடும்பத்தை சார்ந்தவர்களென்றும். பல்லாண்டுகட்கு முன்னரே இவர்கடம் முன்னோர் இவ்வூரில் குடியேறினரென்றும் கூறப்பட்டது. மாயாபுரியின் அரசவம்ச சாடை பெரும்பாலும் இவர்கட்கிருப்பதாயும் ஓர் வதந்தியுண்டு. விமலநாதன் தனது உழைப்பினால் கொண்டு வரும் பணத்தைக் கொண்டே மூவரும் மிகச் சிக்கனமாய் வாழ்க்கை நடத்தினர். சுரேந்திரன் பல உயரிய குணங்கள் இயற்கையிலேயே அமையப் பெற்றவனாயினும் கவலையின்றி ஊர் சுற்றி அலைவதையே தொழிலாய்க் கொண்டிருந்தான். விமலநாதன், தன் தம்பியின் மாட்டு கொண்டுள்ள அளப்பரிய அன்பால் அவனை கடிந்து ஏதுங் கூறுவதில்லை. ஆனால், அவர்தம் மனைவியோ, தங்கணவனின் தம்பியை தன் சொந்த சகோதரனைப் போன்றே எண்ணி நேசித்தாளாதலின், அடிக்கடி சுரேந்திரனிடம் இங்ஙனம் ஊர் சுற்றித் திரிய வேண்டாமென்றும் ஏதேனும் ஓர் வேலையில் அமர்ந்து, ஓழுங்காய் நடந்து கொள்ளும்படியும் அன்பாய் கடிந்து புத்தி புகட்டுவாள். இங்ஙனம் தன் அண்ணியார் அடிக்கடி கூறிவந்தது சுரேந்திரனது மனத்தை உறுத்தியது. அன்றியும், மாயாபுரிக்கும், மற்றும் பிற ஊர்கட்குஞ் சென்று பார்த்து வரவேண்டுமென்னும் மனோவெழுச்சி உண்டாயது. ஆகவே, தமயனும் தமயன் மனைவியும், அறிந்தால் தன்னைப்போக விடா ரென்றெண்ணி, ஒருநாளிரவு ஒருவருமறியாவண்ணம் தான் சேர்த்து வைத்திருந்த 25 ரூபாயை எடுத்துக்கொண்டு மாயாபுரியை நோக்கிப் பிரயாண மாயினான். காலையில் விழித்தெழுந்த விமலநாதன் மனைவி சுரேந்திரனைப் படுக்கையிற் காணாமையான் வெளியிற்சென்றிருக்கக் கூடுமென்றெண்ணி வாளாயிருந்து விட்டாள். ஆனால் பொழுதேற அவள் மனத்தில் விவரிக்க வொண்ணா அச்சம் பூண்டு வதைத்தது. 'வருவான் வருவான்' என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள். இதற்குமேல் உண்மையை உரைக்காதிருத்தல் கூடாதென்றெண்ணி, தங் கணவர் வந்ததும் சுரேந்திரன் காலையிலிருந்து காணப்படவில்லை யென்னும் உண்மையை உரைத்தனள். திடுக்கிட்டுப்போன விமலநாதன் பல ஆட்களைக் கொண்டு எங்குந்தேடியும் அவன் அகப்பட்டானில்லை. பல ஊர்கட்கும் ஆளனுப்பியதன்றி. ஊர்க்காவற்சாவடியிலும் எழுதி வைத்தார். ஒன்றும் பயனளிக்கவில்லை. இதே கவலையால் ஏக்கம் பிடித்த இருவரும் செய்வதியாதெனத் தெரியாமல் கலங்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இவர்கடம் நிலைமை இங்ஙனமிருக்க, மாயாபுரியினை நோக்கிச் சென்று நமது இளவலை கவனிப்போம். பல ஊர்களையுஞ் சுற்றிக்கொண்டு. வருவோர் போவோரிடங் கேட்டு மாயாபுரியின் எல்லையைக் குறுகினான். கையிற் பணமில்லை என்ன செய்வதெனத் தெரியாது சற்று தயங்கினன். மீண்டும் அவனுக்கு இயல்பாய தைரியம் திரும்பி வந்தது. நேரமோ கழிந்து கொண்டே சென்றது. அன்று பொழுது போவதற்கு முன் மாயாபுரியின் எல்லைக்குள் சென்று விட்டதற்கடையாளமாய் அவ்வெல்லையின் ஆரம்பத்தில் அழகியதோர் சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. சுரேந்திரனுக்கு பசியோ மிகவும் அதிகமாயிருந்தது. அன்றியும் வழிப் பிரயாணத்தினாலும் மிகவுங் களைப்படைந்திருந்தான். மழைத்துளிகள் சிறு சிறு துளிகளாய் விழுந்து கொண்டிருந்தன. அச்சிற்றுண்டிச் சாலையின் கதவு மூடிவைக்கப் பட்டிருந்தது. சுரேந்திரன் மெதுவாய்ச் சென்று கதவைத்தட்டினான்.
சிற்றுண்டடிச் சாலையின் சொந்தக்காரனது இளம் மகளொருத்தி கதவை திறந்தாள். கதவினைத் திறந்து விட்ட அவ்விளம் பெண் சுரேந்திரனைக் கண்டதும் வியப்போடு ஊற்று நோக்கி தலைவணக்கஞ் செய்தாள். அவட்கு சிறிது நேரம் பேச வாயெழவில்லை. பிறகு அவள் சுரேந்திரனை நோக்கி, "மாட்சிமை தாங்கிய பெருமானே, வருக! எங்கள் மனைக் கெழுந்தருளி எங்களைக் கௌரவித்த கோமானே வருக!" எனக் கூறிவிட்டு, தன் தாய் தந்தையரை அழைக்கும் பொருட்டு உள்ளே ஓடிச் சென்றாள்.
அவள் செய்த தலைவணக்கமும், தோற்றுவித்த வியப்புக்குறியும் சுரேந்திரனை, திப்பிரமை அடையும்படி செய்துவிட்டன. எதற்காக தனக்கு அவள் இத்துணை கௌரவங் கொடுக்க வேண்டுமென எண்ணி வியப்புக்கடலுள் ஆழந்திருக்கும் சுரேந்திரனை, அவள் கூறிய மொழிகள் பின்னும் ஆச்சரியத்தில் அவனை ஆழ்ந்துபோமாறு செய்து விட்டன. அவன் ஒன்றுந் தோன்றாமல், வியப்பே வடிவாய் பேசா ஊமை போன்று நின்று கொண்டிருந்தான்.
![]() வனமாளிகை இச் சிற்றூண்டிச் சாலைக்கு ஏறக்குறைய ஒரு மைல் தூரத்தில் அழகிற் சிறந்த வனமாளிகை யொன்றுண்டு. அதைச் சுற்றிலும் விசாலமான எழில் நிறைந்த சிங்காரவன மொன்றிருந்தது. சில தென்னை மரங்கள், ஒன்றிரண்டு மாமரங்கள் தவிர அத்தோட்டத்தில் இருந்தவை பூத் தொட்டிகளும். 'குரோடன்' வரிசைகளும் கொடிப் பந்தல்களுந்தான். அவ் வனமாளிகைக் கெதிரில் ஒரு கொடிப் பந்தரின் மறைவில் அழகியதோர் ஊற்றுக் குழாய் நடுவில் அமைக்கப்பட்ட வட்டம் ஒன்றிருந்தது. இந்த வட்டத்தில் பன்னீர் தௌ¤ப்பதேபோன்று, சுழல் குழாய் நீரைத் தௌ¤த்தபோது சூரிய கிரணங்கள் நீர்த்துளிகளில் பட்டு. இடைவிடாமல் வானவில் நிறங்கலை மிக்க அழகாய்த் தோன்றச் செய்த காட்சி, காண்போர் கண்ணையுங் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. இங்ஙனமே பல சிறு குழாய்கள் ஆங்காங்கு கொடிகட்கும் நீரூட்டின. இங்ஙனம் மிக்க வனப்போடு விளங்கிய அவ்வனமாளிகையின் உட்புறத்தில், ஒரு விசாலமான அறையில் நான்கு ஆடவர் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர் மேசையின்பேரில் பல உயர்ந்த மதுபான வகைகளும், தட்டுகளில் பலவிதமான தின் பண்டங்களும் வைக்கப் பட்டிருந்தன. ஒரு பணிமகன் மிக்க அடக்க ஒடுக்கத்தோடு வாயிலில் நின்று கொண்டிருந்தான். அவ்வாறு சீட்டாடிக் கொண்டிருந்த நால்வரின் தோற்றமும், பிறப்பாலும், செல்வத்தாலும் உயர்ந்த கண்ணியமான பெரிய மனிதர்களுடையதாய்த் தோன்றியது. ஒருவர்க்கு ஏறத்தாழ 25 வயதிருக்கலாம். இயற்கையில் மிக்க அழகுடையராயினும், உடம்பு சரியான நிலைமையிலில்லாமையாலோ, துர்ச்செயல் காரணமாயோ வதனஞ்சுருங்கி, கன்னங் குழி விழுந்து மிக்க மெலிந்த தோற்ற முடையராய்க் காணப்பட்டார். அவர்க்கு மற்ற மூவரும் மிக்க பணிவோடும், மரியாதையோடும் நடந்து கொண்டனர். மற்றும் அவர்க்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்த இன்னொருவர்க்கு 50 வயதிருக்கலாம். பரந்த முகமும். விசாலநுதலும், கம்பீர தோற்றமும் உடையராய்த் தோன்றினார்.மற்று மிருந்த இரண்டு பேர்க்கும் நடுத்தர வயதிருக்கலாம். அவர்களும் உயர்வகுப்பைச் சேர்ந்த பிரபுக்களைப் போன்றே காணப்பட்டனர் அப்போது இரவு மணி எட்டியிருக்கலாம். ஆட்டத்திலேயே முற்றும் மனத்தை செலுத்தி, தம்மையும் உலகையும் மறந்திருந்த மூவரையும், 50 ஆண்டெய்திய முற்கூறிய பெரியார் நோக்கி மிக்க வினயமாய், "நேரமாகி விட்டது, இதோடு ஆட்டத்தை நிறுத்திவிடுவோம்" என்றார். ஆனால். அவர்க் கூறியதை ஒருவரும் செவிமடுத்ததாய்த் தோன்றவில்லை. சிறிது நேரம் ஏதோ சிந்தித்திருந்த பெரியவர், மீண்டும் 25 ஆண்டுடைய யௌவன வாலிபனை விளித்து, 'இளவரசரே ! தாங்கள் இச் சூதாட்டத்தில் இத்துணை ஆர்வங் காட்டலாமா? பொதுமக்கள் தங்களைப்பற்றி பலவாறாய்ப் பேசிக்கொள்ளுவதாய் வதந்தி. இராகுலப் பிரபு தங்களைப் பற்றி பொதுமக்கள் கெட்ட அபிப்பிராயங் கொள்ளும்படி தந்திரமாய்ப் பல சூழ்ச்சிகள் செய்வதாயுங் கேள்வியுற்றேன். ஆதலின், முடிசூட்டும் வரையிலாயினும் தாங்கள் இம்மாதிரி காரியங்களை நிறுத்தி வைத்தலே நலமென எண்ணுகின்றேன்" என்று பணிவுடன் மொழிந்தார். அங்கிருந்த மற்றவர், "ஆம், இளவரசே! சேனைத் தலைவர் கூறுவது முற்றிலும் உண்மையே. இராகுலாப்பிரபு இவ்வன மாளிகைக்கு தங்களை வரவழைத்தது கூட ஏதும் சூழ்ச்சியா யிருக்குமென்றே எண்ணவேண்டி யிருக்கின்றது. பொது மக்களிடை தங்களைப்பற்றி கெட்ட அபிப்பிராயத்தைப் பரப்பிவிட்டால். அஃது இராகுலனுக் கநுகூலமானதன்றோ?" என்றார். இன்னொருவர், "ஆம் ஒரு சாரார் இராகுலனுக்காக உழைத்து வருவதாய்த் தெரிகின்றது. தங்களின் நடத்தை கெட்டதென நிரூபிக்கப்படுமாயின், அதை இராகுலப்பிரபுக் கநுகூலமாய் உபயோகித்துக்கொள்ளவும், அவர்கள் விருப்புகின்றனர்-" என்று கூறி வரும்பொழுது, இளவரசர் அவரை அடை மறித்து, "ஆம், நண்பர்களே! நீங்கள் இப்போது கூறியவையெல்லாம் உண்மையே. இராகுலனது சூழ்ச்சிகளை அறியாமல் நாம் இங்கு வரவில்லை. அவன் செய்வனவற்றை நாம் அறிந்து கொள்ளாதது போன்றே நடிக்கவேண்டும். என்பேரில் குடி மக்களிடையே கெட்ட அபிப்பிராயம் பரப்பப்படுமாயின். இராகுலனையே தமக்கரசனாய்த் தேரந்தெடுப்பார்களென்று அவன் நம்பியிருக்கிறான்" என்றார். "அங்ஙனம் அவர் எண்ணுவது இயல்புதானே? தாங்கள் அரசராய் வராவிடின். தங்கட்கடுத்தபடி அரசுரிமைக்குரியார் இராகுலப் பிரபுவன்றோ? அதுவன்றி பிரபு இராகுலன். இளவரசி விஜயாளை மணக்க பெரிதும் விரும்புவதாய்த் தெரிகின்றது. இன்னொரு விஷயத்தையும் நாம் முக்கியமாய் கவனிக்கவேண்டும். பொதுமக்களின் விருப்பம், விஜயசுந்தரி தங்கட்கரசியாக வேண்டுமென்பதே" என்றார் சேனாதிபதி கமலாகரர். "ஆம், கமலாகரரே! நீர் கூறுவது உண்மையே. ஆனால் அரசிளங்குமரி விஜயம் என்னை நேசிக்கின்றாளா? என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவளிடத்து என் மனத்தை எத்துணை வெளிப்படையாய்த் திறந்து காட்டியபோதினும் அவள் தன் உள்ளக்கருத்தை ஒருவராலும் அறிந்துகொள்வதற் கியலவில்லை" என்று ஒருவாறு வருத்தத்தோடு கூறினார் இளவரசர். "ஆயினும், அவள் கடமைத் தவறாதவன். பொது மக்கள் தன்னை அரசியாக கண்டு களிக்க விரும்புவதை அவள் நன்கறிவாள். குடி மக்களின் விழைவையும், இறந்துபோன தன் தந்தையாரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதே தங்கடனென எண்ணுவாளேயன்றி, அதற்கு மாற்றமாய் நடக்கச் சிறிதும் துணியாள்" என்றார் கமலாகரர். அத்துடன் அவர்கடம் பேச்சு முடிவுற்றது. அதற்குமேல் ஆட்டத்தை நிறுத்தி விட்டு. ஆகாரம் அருந்துதற்கு சமையல் கட்டிற்குச் சென்றனர்.
![]() மாயாபுரி நாம் கதையைத் தொடர்ந்து செல்லுதற்கு முன் மாயாபுரியைப் பற்றிச் சிறிது அறிந்து கொள்ளுதல், கதா நிகழ்ச்சிக்கு இன்றியமையாதது வேண்டப்படுவதால், அதைப்பற்றிய சில விவரங்களை அறிவதற்காக, நாம் இங்கே சற்று தாமதிப்போம். மாயாபுரி யென்பது இரண்டு மலைகட்கு நடுவே, அழகான பள்ளத்தாக்கில், ஆற்றங்கரை யோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மலைப்பிரதேசம். அப் பிரதேசத்தை அரச குடும்பத்தின் வழித்தோன்றலாக வந்த சுசீலரென்பார் ஆட்சி புரிந்து வந்தார். அவர்க்கு விஜய சுந்தரி என்ற பெண்மகவைத் தவிர, வேறு குழந்தைகள் கிடையா. ஆகவே சுசீல மன்னர்க்குப் பிறகு, அவர் சகோதரி புதல்வனான பிரதாபனே பட்டத்திற்குரியனாய், அந்நாட்டு வழக்கப்படி கருதப்பட்டான். அதுபற்றி குடிமக்களும், உற்றார் உறவினரும், பிரதாபனை இளவரசனாகவும், விஜயத்தை இளவரசியாகவுங் கருதி மரியாதை செலுத்தி வந்தனர். செல்வி விஜயாள் மக்கள் மனத்தைக் கவரும் மாண்புடன் விளங்கினாள். சிறந்த அழகும், பரந்த ஞானமும், சீரிய குணமும் ஒருங்கமையப்பெற்ற இளவரசியை மக்கள் விரும்பியது வியப்பாமா? அவள் ஏழைகளிடத்து காட்டும் அன்பும், ஆதரவற்றரிடங் கூறும் இனிய மொழிகளும் அவட்கு தனி மதிப்பைக் கொடுத்தன. இளவரசன் பிரதாபனுக்கடுத்தபடியாய், பிரபு இராகுலனே பட்டத்திற்குரியனாய்ப் பொது மக்களாற் கருதப்பட்டான். அவன், கோமகன் பிரதாபுக்கு ஒன்றுவிட்ட சகோதரனாவான். இஃதிங்ஙனமிருக்க, தமக்கு மரண காலம் கிட்டிவிட்டதென உணர்ந்த சுசீலமன்னர், தமது மந்திரி, பிரதானிகள், சேனைத் தலைவர் முதலியோரை அருகழைத்து. பிரதாபனையும் விஜயாளையும், தமக்குப் பிறகு அரசனையும் அரசியாயும் ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அரசர் கூறியதை மந்திர சுற்றத்தார், தந்திரச் சுற்றத்தார் முதல் எல்லோரும் அன்போடு ஏற்றுக்கொண்டனர். பிறகு, தம் மகளையும் மருமகளையும் மருங்கழைத்து, இருவரும் ஒருவரையொருவர் மணந்துகொண்டு, அரச பாரத்தை ஏற்று, நீதிநெறி வழுவாது ஆட்சி புரிந்து வருவதே தம் விருப்பமெனக் கூறி, மீண்டும் தம் மகளை நோக்கி, "குழந்தாய்! நான் கூறியவைகளை யெல்லாம் உன் மனதில் பதிய வைத்துக்கொள். உன் அன்னையார் இறந்து இத்தனை ஆண்டுகளாய், அவளது விருப்பத்தை நிறைவேற்றுவான் வேண்டி, நான் மற்றோர் மாதை மணம் புரிந்து கொள்ளவில்லை. உன்னையே என் ஏகபோக சொத்தாக நினைந்து அன்பு பாராட்டி வந்தேன். நீ கடமைத் தவறாது நடந்து கொள்ளுவாயாக. நீயும் பிரதாபும் ஒன்று பட்டு, நெறி பிறழாது ஆட்சி புரிந்து வருவீர்களாயீன், குடிமக்கள் உங்களை வாழ்த்துவர். நாட்டில் அமைதி நிலவும். பகைவர் அஞ்சியோடுவர். இம்மாயாபுரி. பிற ஆட்சிக்குட்பட்டதன்று. இஃது தனிப்பட்ட பிரதேசம். நீ என் விருப்பத்தை மீறி. பிரதாபை விடுத்து, பிறனொருவனை மணந்துகொள்ளுவாயின்.அரசுரிமையைப்பற்றிய கிளர்ச்சிக்கு இடமளித்தவளாவாய். விஜயா! இன்னும் அரை நாழிகையிலோ ஒரு நாழிகையிலோ என் உயிர் போய்விடும், ஆகவே, நீ என் விருப்பப்படியே பிரதாபை மணந்து கொள்ளுவா யென்று உறுதியாய் நம்பி, நான் மன அமைதியுடன் உயிர் விடுகின்றேன். இறக்குந் தறுவாயிலிருக்கும் எனது இந்த விருப்பத்தை, பூர்த்தி செய்ய வேண்டியது புதல்வியாகிய உனது கடமை" என்று உருக்கத்தோடு கூறினார். பிறகு பிரதாபை அருகழைத்து, பல்வேறு புத்தி புகட்டி, ஒழுக்க நெறி கற்பித்து, தமது சேனைத் தலைவர் கமலாகரர் கூறும் புத்திமதியைக் கேட்டே நடந்து கொள்ள வேண்டுமென்று கூறினார். அதன் பிறகு கமலாகரரை அழைப்பித்து, பிரதாபை அவரிடம் ஒப்படைத்து, அவரது சொந்தக் குழந்தையைப் போலவே அவனை பாவித்து, எல்லா விஷயங்களிலும் அவர் தம் விருப்பப்படியே செய்து வரவேண்டு மென்றுந் தெரிவித்துதன்றி கமலாகரர் கடமைத் தவறாத உத்தம புருடராகலின், அவரிடத்து தமக்கு முழு நம்பிக்கையும் உண்டெனத் தெரிவித்தார். இங்ஙனம் பேசிக்கொண்டிருந்த சில வினாடிகட்கெல்லாம், அவ்வரசர் பெருமான் என்றும் எழுந்திரா நித்திரையிலாழ்ந்தார். ஆறு மாதங்கள் கடந்தன. விஜயாளின் இளம் பருவத்திலிருந்தே அவள் மாட்டு அளப்பரிய அன்பு பாராட்டி வந்த இளவரசன் பிரதாப், சுசீல மன்னர் இறந்த பிறகு இன்னும் அதிகமாய் அவளை நேசித்து வந்தான். ஆனால் செல்வி விஜயாள், பிரதாபை அத்துணை தூரம் நேசித்தாளா? இல்லையா? என்பதை ஒருவராலும் உணர்ந்து கொள்ளுதற் கியலவில்லை. விஜய சுந்தரியின் உள்ளப் பான்மையை ஒருவராலும் வெளிப்படையாய் விளங்கிக்கொள்ள முடியாமையான் பிரதாப் தனது விருப்பத்தை அவளிடம் அத்துணை அதிகமாய் தெரிவிக்க அஞ்சினான். ஆனால் பொது மக்களோ விஜயாளை அரசியாகக் கண்டு களிக்க ஆவலுற்று துடித்துக்கொண்டிருந்தனர். இளவரசன் ஒரு உல்லாச புருஷன். மக்கட்கு அவனது நடத்தைகளில் சில பெரும்பாலும் அருவருப்பைத் தந்தன. அவனது நடத்தையைப்பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொள்ளுவாராயினர். குடியிலும் ஆடம்பரத்திலும் மூழ்கியிருப்பதாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்,இங்ஙனம் பிரதாபின் நடத்தையைப்பற்றி குடி மக்களிடம் மிகைப்படுத்தி, மிகத் தந்திரமாய்ப் பிராசாரம் புரிந்து வந்தது பிரபு இராகுலனது வகுப்பாரே. ஆயினும், குடிமக்கள் தாம் அன்போடு நேசித்துவரும் செல்வி விஜயாளுக்கு கணவனாகப் போகிறவரும், இறந்து பட்ட மன்னரின் விருப்பப்படி தங்கட்கு அரசராய் வரக்கூடிய வரும், அத்தேய வழக்கப்படி நேரிய முறையில் அரசுரிமைக் குரியருமான இளவரசன் பிராதாபைப் பற்றி வெளிப்படையாய் பேசிக்கொள்ள அஞ்சினார். இந்நிலையில்தான் முடிசூட்டுதற் குறிய ஏற்பாடுகள் நடைபெற்றன. முடி சூட்டுதற்கென்று நல்ல நாளொன்று குறிப்பிடப்பட்டது. அன்று எப்படியும் முடிசூட்டியே தீர வேண்டுமென்பது குடி மக்களது அவா. பிரபு இராகலனோ, இளவரசி விஜயாள் மாட்டு தன் மனத்தைப் பறிகொடுத்திருந்தான். அவளையும் அவட்கே நியாயமாய் உரித்தான சிம்மாசனத்தையும் கவர்ந்து கொள்ள பெரிதும் பேராசைக்கொண்டான். இயற்கையிலேயே ஆழஅறிவும் அறியசூழ்ச்சியும் உடைய இராகுலானது மூளை பிரதாபுக்கு முடிசூட்டு தற்கியலாமல் எங்ஙனம் தடுக்க முடியுமென்பதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. சில நாட்களாய் உடல் நலமின்மையான் மெலிந்து தோன்றிய பிரதாபுவைக் கண்ட இராகுலன், அதுவே தான் சூழ்ச்சி செய்தற்கு ஏற்ற தருணமாய் நினைந்தான். அடிக்கடி பிரதாபிடத்து, கிராமத்திற்குச் சென்று, சில நாட்கள் ஆங்கிருக்கும்படியும், அங்ஙனம் கிராமத்திற்குச் செல்லின், கிராமக் காற்றும், இனிமையான இயற்கைக் காட்சிகளும் அவன் மனத்தைக் கவரக் கூடுமென்றும் கூறிவந்தான். பிரதாபின் மனத்திற்கு இராகுலனது மொழிகள் சூழ்ச்சியாய்த் தோன்றியபோதிலும், கிராமவாசமே உடல் நலத்திற்கு கேற்றதென நினைந்து, சில நாட்கள் கிராமத்திலுள்ள இராகுலனது வனமாளிகையிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்தான். இராகுலன் தன் கருத்து நிறைவேறுதற்குரிய ஏற்ற தருணத்தை எதிர்நோக்கி யிருந்தமையான், தன் சொந்த பணி மக்கள் மூலமே எல்லா ஏற்பாடுகளுஞ் செய்து தெரிவித்தான், குறித்த நாளொன்றில் இளங்கோ பிரதாப், இராகுலனது சூழ்ச்சியை சிறிதும் அறிந்துகொள்ளாததே போன்று நடித்து அவனது வனமாளிகைக்குச் செல்ல, கமலாகரரும் இன்னும் முக்கியமான சில பிரபுக்களும் பின் தொடந்தனர். இங்ஙனம் இளவரசன் பிரதாப், பிரபு இராகுலனது வனமானிகைக்குச் சென்றபொழுதுதான், நமது கதை ஆரம்பமாகின்றது.
![]() ஹோட்டலில் சுரேந்திரன் வாசகர்களே ! இனி, நாம் கதையைத் தொடர்ந்து செல்வோம். சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரனது புதல்வியின் மொழிகளைக் கேட்டு ஆச்சரியத்தினால் கற்சிலையைப்போன்று சுரேந்திரன் நின்றுவிட்டான் என்று முன்னர்க் கூறினோமல்லவா? அங்ஙனம் சில வினாடிகளே நின்றுகொண்டிருக்க, அதற்குள் அச் சிறுமி, தன் தாய் தந்தையரை அழைத்து வந்தாள். இவர்களிருவரும் சுரேந்திரனைக் கண்டதும் சிறுமி சுசீலை செய்தவாறே தலை வணங்கி நின்றனர். சிறிது நேரம் வியப்பே வடிவாய் ஒன்றும் பேசாதிருந்த சுரேந்திரன். பிறகு அவர்களைப்பார்த்து,"நீங்கள் ஏன் என்னைக் கண்டதும் இங்ஙனம் தலைவணங்கி நிற்கின்றீர்கள்? இச் சிறுமி கூறிய வார்த்தையின் பொருளென்ன? என்னால் ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அன்பு கூர்ந்து சற்று விளங்க உரைக்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்" என்றான். சுரேந்திரன்:- நான் மதுரையைச் சேர்ந்தவன் . என் பெயர் சுரேந்திரன்னென்பர். எனக்கு இம் மாயாபுரியையும் மற்றம் பிற ஊர்களையும் பார்க்க வேண்டுமென்னும் அவா அதிகமாயிருந்ததுபற்றி, யான் என் வீட்டார் ஒருவரும் அறியாவண்ணம், இரவில் வீட்டை விட்டும் வெளிப்போந்து. பல ஊர்களுஞ் சுற்றிப் பார்த்துக்கொண்டே இன்று இங்கு வந்தடைந்தேன். இவ்வளவுதான் என் வரலாறு. சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரன்:- ஐயா! நாங்கள் உம்மைக் கண்டு தலைவணங்கி, நின்றதற்குக் காரணம். இன்னும் இரண்டொரு நாட்களில் முடிபுனையப்போகும் எங்கள் இளவரசர் பிரதாபன். உருவத்தில் உம்மைப்போலவே இருப்பார்.நன்றாய்க் கூர்ந்து கவனித்தாலன்றி. ஒருவராலும் உம்மை பிரதாபல்லவென்று தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் இளவரசர் பிரதாபைவிட நீர் இளமையுடையாராயும், அழகுடையாராயும் காணப்படுகின்றீர். உமது வதனத்தில் இருக்கும் மீசையை மட்டும் நன்றாய் வெட்டி விட்டுக்கொண்டால், உமக்கும் அரசர்க்கும் வேற்றுமை கண்டுபிடிக்க யாராலும் முடியாது. நண்பரே! இப்போது உம்மைக்கண்டு நாங்கள் தலைவணங்கியதற்குரிய காரணத்தை விளங்கிக்கொண்டீரல்லவா? சுசீலை:- ஆம், அப்பா! இவரைக்கண்டதும் நமது இளவரசர் என்றே நான் எண்ணினேன். அதனாலேயே உங்களை யழைத்து வந்தேன். இவர்கள் கூறியதைக்கேட்ட சுரேந்திரன் சற்றுநேரம் ஏதோ சிந்தித்துக்கொண்டு பேசாதிருந்தான். பிறகு அவர்களைப்பார்த்து, "ஆம், ஐயா, நீங்கள் கூறியவை யெல்லாம் உண்மையென்று உணர்ந்து கொண்டேன். ஆனால் என் மனத்தே ஒரேயொரு ஐயம் எழுகின்றது. அஃதாவது, மாயாபுரியின் இளங்கோவான பிரதாப், என்னைப் போன்று எளிய உடையில், இங்ஙனம் தன்னந் தனியே இந் நேரத்தில் வருவாரே? என்பதே" என்றான் . "அன்பான ஐயா, உமது மனத்திலுதித்த ஐயம் நியாயமானதேயாகும். இளவரசர் தமது தலை நகரிலிருந்து இவ்விடத்திற்கு தனியே வரவில்லை. இவ்விடத்திற்கு சமீபத்திலேயே இராகுலப் பிரபுவினது வனமாளிகை இருக்கின்றது.. பிரதாப இளவரசர், உடல் நலத்தைக்கருதி இவ்வனமாளிகையிற் சில நாட்களாய்த் தங்கியிருக்கின்றார். அவர் ஒருவிதமான உல்லாச பேர்வழியாதலின், சிற்சில அமயங்களில் அவர்மாறுடையயோடு எங்கேனும் செல்வதுண்டு. அதைப் போலவே, இன்று அவர் இங்கு வந்திருப்பதாய் நாங்கள் எண்ணியது ஓர் வியப்பல்ல. ஏன், நான் சொன்ன காரணம் உமக்கு பொருத்தமாகப் படவில்லையா? என்றான் சாப்பாட்டு கடைக்காரன். "நீர் கூறியதில் பொருத்தமற்றது ஒன்றுமில்லை. சரி, இது போகட்டும். இளவரசர் பிரதாபனுக்கு முடிசூட்டு வைபவம் இன்னும் இரண்டொரு நாளிலென்றா கூறினீர்" என்றான் சுரேந்திரன். "ஆம், அப்படித்தான் எங்கும் கூறிக்கொள்ளுகின்றனர். எங்கு பார்த்தாலும் இதே பேச்சாகவேயிருக்கின்றது. முடிசூட்டு வைபவத்தைப் பார்க்கும்பொருட்டு ஆயிரக்கணக்கான மக்கள். தலைநகரை நோக்கிச் செல்லுகின்றனர். என் மகள் சுசிலையும் அங்கு செல்லவேண்டுமென்றே தொந்தரை கொடுக்கின்றாள்" என்றான் ஹோட்டல் சொந்தக்காரன். "பேச்சிலேயே பொழுதை போக்கிவிட்டால். வந்திருப்பவர் உணவருந்த வேண்டாமா? நேரமாகிறது, சாப்பிட வாருங்கள்" என்று சற்று அதிகார தோரணையில் தங்கணவனைப் பார்த்துக் கூறினாள் ஹோட்டல்காரன் மனைவி. அத்துடன் அவர்களது பேச்சு நின்று விட்டது. சிற்றுண்டிச்சாலை சொந்தக்காரன் முன்செல்ல, அவனைத் தொடர்ந்து அவனது மனைவியும், மகளும், சுரேந்திரனுஞ் சென்றனர். சுரேந்திரனுக்கு மிக்க உருசிகரமான உணவு வகைகளும். பானைவகைகளும் பரிமாறப்பட்டன. மிகவும் பசியோடிருந்த சுரேந்திரன், அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுவகைகளை நன்றாய்ச் சாப்பிட்டான். பிறகு அவனுக்கென விடப்பட்ட படுக்கையறையிற் சென்று, களைப்பு மேலீட்டால் படுக்கையிற் படுத்து ஆழ்ந்த துயிலில் அழுந்தி விட்டான். காலை மணி எட்டுக்கு படுக்கையினின்றெழுந்து உட்கார்ந்தான். அவன் படுத்திருந்த அறையின் பலகணிவழியாய்ச் சூரிய கிரணங்கள் வீழ்ந்து கொண்டிருந்தன. தான் வெகு நேரம் வரையிலும் அயர்ந்து துயின்று விட்டதாய் நினைந்த சுரேந்திரன், காலைக்கடன் கழிக்க வெண்ணிஉடனே படுக்கையினின் றெழுந்தான். எழுந்திருக்க முடியவில்லை. உடல் அவ்வளவு கனத்திருந்தது. தன் உடல் மிகவுங் களைப்படைந்திருந்தமையான், இன்று பகற்பொழுது முழுதும் ஓய்வெடுக்கக் கொள்ளவேண்டுமென்றெண்ணி, ஒருவாறு எழுந்து காலைக்கடன் கழித்து, ஏதோ சிறிது ஆகாரம் உட்கொண்டு மீண்டும் படுக்கையிற் படுத்துக் கொண்டான். இங்ஙனம் பகற்பொழுது கழிய, சாய்ங்காலம் மணி ஐந்துக்கு, அந்த ஹோட்டல்காரனுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு. அங்கிருந்து புறப்பட்டான் மெல்லமெல்ல சுரேந்திரன், வழிநெடுக நடந்து கொண்டிருந்தான். நேரங் கழிந்து கொண்டே சென்றது. அவ்வமயம் அவன் கண்கட்கு இனிமையாய்த் தோன்றிய சிங்காரவனமொன்¢று காணப்பட்டது. அதன் வாயில் எவ்வித காவலுமின்றி திறந்திருந்தமையால் சுரேந்திரன் அதைச் சுற்றிப்பார்க்க வெண்ணி அதற்குள் நுழைந்தான். அஃது மிக்க மனோகரமாய் விளங்கியமையான், அன்றிரவை அங்கேயே கழிக்க நினைந்து, ஆங்கோரிடத்திற் தோன்றிய பசும்புற்றரையில் அமர்ந்து கொண்டான். தன்னைக் காணாது, தன் அண்ணனும அண்ணியும் எங்ஙனம் வருந்துகின்றனரோ என்றெண்ண அவன் மனம் மிக்க துயரடைந்தது. அதனோடு பல்வேறுபட்ட நினைவுகளும் அவன் மனத்தில் தோன்றின. இங்ஙனம் தன் மனத்திற்தோன்றிய நினைவுகளிலேயே தன் சிந்தனையை செலுத்தியபடி, அப்புற்றரையிலேயே படுத்து உறக்கத்தில் ஆழ்ந்தான்.
![]() வனமாளிகையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பகலவன் கிழக்கே தோன்றினான். அவனது வெய்ய கிரணங்கள் இராகுலப் பிரபுவினது வன மாளிகைமீது வீழ்ந்தன. சுரேந்திரன் கண் விழித்தான், தான் ஒர் புற்றரையில் படுத்திருப்பதை உணர்ந்து, உடனே எழுந்து உட்கார்ந்தான். காலை நேரத்தில் அவ்விடம் மிக்க மனோகரமாய்த் தோன்றியது. அத்தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க எண்ணி, மெதுவாய் எழுந்தான். எங்கு பார்க்கினும் அழகிய பூஞ்செடிகளும், குரோடன் வரிசைகளுமே காணப்பட்டன. அத்தோட்டத்தின் நடுவே எழில் மிகுந்த மாளிகை யொன்றிருந்தது. அம்மாளிகையின் எதிரிலிருந்த கொடிப்பந்தல், எல்லாவற்றினுஞ் சிறந்து மிகக் கம்பீரமாய் விளங்கிற்று. அதன் மீது பல நிறங்களையுடைய பூக்கள் எண்ணற்று மலர்ந்திருந்தன. பூக்கள் இலைகளைக்கூட மறைத்துவிட்டன. தென்றலின் அவை ஒய்யாரமாய் அசைந்தசைந்தாடியது. காண்போரைக் களிப்புறும்படி செய்தது. இத்தகைய எழில் மிகுந்த அச்சிங்கார வனத்திடையே சுரேந்திரன் உலாவி வரும்பொழுது, அங்கியணிந்த, நீண்ட ஒருருவம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு தம்பித்து நின்று விட்டான். அங்ஙனம் எதிர்பாராது தன்னை நோக்கிவரும் உருவத்தைக் கண்ட நமது இளவல் சற்று அச்சமடைந்தானென்றே கூறல் வேண்டும். அவ்வாறு வந்த அவ்வுருவம் கிட்ட நெருங்கியதும், அஃது கம்பீரத் தோற்றமுடைய ஓர் கனவான் என்று சுரேந்திரன் அறிந்து கொண்டான், அக்கனவான் அவனை நெருங்கி வந்ததும், நின்று தலைவணங்கி பிறகு அவனைப் பார்த்து," என்ன இளவரசே! காலை நேரத்தில் உல்லாசமாய்ப் பொழுது போக்குகிறாப்போல் தெரிகிறதே" என்று விகடமாய்க் கூறினார். அக்கனவான் காட்டிய மரியாதையையும், கூறிய மொழிகளையுங் கேட்ட சுரேந்திரன் முந்தியைப் போன்று அத்துணை வியப்படையவில்லை. எனினும், ஹோட்டல்காரன் கூறியவை. அவன் மனத்திற்கு உறுதிப்பட்டன. இங்ஙனம் அவன் பல்வேறு எண்ணங்களான் மனங்குழம்பி வாய் பேசாதிருக்க, அக்கனவான் அவனை உற்று நோக்கியதும் பெரிதும் வியப்படைந்து, சிறிது நேரம் ஒன்றும் பேசாதிருந்து, பிறகு அவனைப் பார்த்து, "ஐயா, நீர் யாரென அறிவிக்க முடியுமா? உலகினில் ஒருவரின் சாடை மற்றொருவர்க்கு இருப்பது இயல்பே. ஆயினும், இங்ஙனம் ஒருவரைப்போல் மற்றொருவர் அச்சு, அடையாளம் பூராவும் இருத்தல் சாத்தியமாமா? எங்கள் இளவரசர்க்கும் உமக்கும் எவ்வித உருவவேற்றுமையுமில்லை. உமது மீசையை எடுத்துவிடின், உம்மை யாரும் இளவரசரல்லவென்று நினைக்க இயலாது. இளவரசரோடு நெருங்கிப் பழகும் நானே, உம்மை உடனே கண்டுபிடிக்க இயலவில்லையே-"என்று கூறி வரும்பொழுது, வெகு தமாஷாய்ப் பேசிக்கொண்டே ஒருவர் இவர்களை நோக்கி ஓடி வந்தார். "என்ன கமலாகரரே! பேச்சு வலுத்தாப் போலிருக்கிறதே!" என்று கூறிக்கொண்டே இவர்களை நெருங்கினார். மிகச் சமீபமாய் நெருங்கியதும் சுரேந்திரனைக் கண்டு பிரம்மித்து நின்றுவிட்டார். சுரேந்திரனும் வந்தவரை நோக்கி ஆச்சரியத்தில் அமிழ்ந்து வாய்பேசாது நின்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் வந்தவரே பேசத் தொடங்கி, சுரேந்திரனைப் பார்த்து, "இளைஞனே, நீ யார்? உன்னை பார்க்கப் பார்க்க, நீ இளவரசனா? நான் இளவரசனா யென்பது எனக்கே சந்தேகமாகி விட்டது. உண்மையிலேயே என்னைப் போலவே யிருக்கின்றாய்! உயரம், பருமன், நிறம் எல்லாம் ஒரேமாதிரியாகவேயிருக்கின்றன. நீ யாரப்பா? உண்மையைக் கூறு" என்றார். சுரேந்திரன் வந்தவரே இளவரசரென முன்னரே ஒருவாறு யூகித்துக்கொண்டான். அவர் கூறியதைக் கேட்டதும், அவனது யூகம் உறுதிப்பட்டது. அங்ஙனம் உறுதிப்பட்டதும், இளவரசர்க்கு உடனே தலை வணங்கினான். இளவரசர்க்குமுன் வந்து தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர் சேனைத் தலைவர் என்பதையும் அறிந்துகொண்டான். சிறிதுநேரம் ஏதோ சிந்தித்திருந்து பிறகு அவர்களைப் பார்த்து, "மாட்சிமை தங்கிய இளவரசே! சேனாதிபதியவர்களே! நான் மதுரையைச் சேர்ந்தவன், என் பெயர் சுரேந்திரனென்பர். பல ஊர்களையுஞ் சுற்றிக்கொண்டு முந்தா நாள் மாலை இவ்விடத்திலிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள சாப்பாட்டு விடுதி வந்தடைந்தேன். அச்சாப்பாட்டு விடுதியின் சொந்தக்காரர் இன்னும் இரண்டொரு நாட்களில் முடிசூட்டு வைபவம் நிறைவேறப் போவதாய்க் கூறினார். ஆகவே, அதைப் பார்க்கும் பொருட்டு, தலைநகர்ச் செல்ல உத்தேசித்து இவண் வந்தடைந்தேன்" என்றான். "என் இளவரசே! நான்கூட முதலில் தாங்கள்தானென்றெண்ணி விட்டேன். பிறகே உண்மையை உணர்ந்தேன் உடையினாலும், மீசையினாலுமன்றி வேறுவிதத்தால் இவரை தாங்கள் அல்லல்வென்று உணர்தற்கியலா. ஆனால், இவர் தங்களை விட இளமையாய்த் தோன்றுகிறார்" என்றார் கமலாகரர். "உண்மையே சகோதரா, நீ தனியே தலைநகர்ச் செல்லவேண்டாம். நாம் எல்லாரும் ஒன்றாகவே போவோம். என் சிம்மாசனத்தருகிலேயே உன்னை உட்கார வைத்துக் கொண்டால் எல்லாரும் வியந்து நம்மையே நோக்குவர். நல்ல வேடிக்கையாயிருக்கும். சேனாதிபதியவர்களே! நான் கூறுவது எப்படி?" என்றார் இளவரசர். கமலாகரரும் அவர் கூறியதையே தழுவிக் கூறினார். மீண்டும் இளவரசர் சுரேந்திரனைப் பார்த்து, "சுரேந்திரா, நாளைக்குத்தான் முடிசூட்டு வைபவம். இன்றிரவு இங்கிருந்து விட்டு, நாளைக்கு அதிகாலையில் நாம் எல்லாரும் அரண்மனைக்குச் சென்றுவிடல் வேண்டும். நீயும் எங்களோடு கூடவே தங்கிவிடு" என்று அன்போடு கூறி, அவனது கையினைப்பற்றி இழுத்துக்கொண்டே வனமாளிகையின் உட்புறம் செல்ல, சுரேந்திரன் மட்டற்ற மகிழ்ச்சியோடு அவரைப் பின் தொடர்ந்தான். பிறநாட்டில் தனது அனாதரவான நிலையில், எதிர்பார்க்க முடியாதவிடத்தின் நட்பு கிடைத்ததைப்பற்றி எல்லாம் வல்ல இறைவனை மனத்தாற்றொழுதான். அன்று பகற்பொழுது மிக்க ஆடம்பரத்தோடு கழிந்தது. இரவு வந்தடுத்தது. மாளிகை முழுதும் எங்கு பார்க்கினும் பட்டப்பகல் போன்று பல விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வீசின. இரவு மணி ஒன்பதடித்தது. இளவரசர் பிரதாபனும், சேனைத் தலைவர் முதலியோரும் நமது கதாநாயகனை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேஜையின் மீது பலவகையான சிற்றுண்டிகளும் மதுபானங்களும் வைக்கப்பட்டிருந்தன. எல்லாரும் மேசையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளிலமர்ந்து சிற்றுண்டிகளருந்தினர். அப்பால் மதுபானமருந்த ஆரம்பித்தனர். எல்லாரும் மட்டாகவே குடித்தனர். ஆனால், இளவரசரோ மிதமிஞ்சி பருகிக்கொண்டே போக, இடையிடையே கமலாகரர் எச்சரித்துக்கொண்டே வந்தார். ஆயினும் இளவரசர் கேட்டாரில்லை, இறுதியில் இராகுலப் பிரபுவினால் அங்கு அமர்த்தப்பட்டிருந்த பணிமகனொருவன், உருக்கிய பச்சைநிற ஸ்படிகம்போல் பளபளவென்று பிரகாசித்த, ஒருவகைபானத்தை, ஒருகிண்ணத்தில் ஊற்றி, அதை இளவரசர்க்கு மட்டும் தனியே கொடுத்தமையால் ஐயுற்ற கமலாகரர், அதைப் பருகவேண்டாமென்று இளவரசரிடந் தெரிவித்தார். இளவரசர் அவர் கூறியதைக் கேட்காது அப்பானத்தை மடமடவெனக் குடித்துவிட்டார். அப்பால், எல்லாரும் மிக்க மகிழ்வோடு பற்பல விஷயங்களைப்பற்றி உரையாடிக் கொண்டிருக்க, இளவரசர் தமக்கு தூக்கம் வருவதாய்க் கூறி பள்ளியறைக்குட் சென்றனர் சுரேந்திரனும் சீக்கிரமாகவே அங்கிருந்து எழுந்து, தனக்கெனக் கொடுக்கப்பட்ட அறைக்குட் சென்று படுக்கையிற் படுத்து துயிலில் ஆழ்ந்தான். மணி மூன்றிருக்கலாம். யாரோ அவனது படுக்கையறைக் கதவை மெல்ல மெல்லத் தட்டுஞ் சத்தங்கேட்டு, திடுக்கிட்டு துயிலுணர்ந்தெழுந்து, கண்களிரண்டையும் கசக்கிக்கொண்டே சென்று கதவினைத்திறக்க, எதிரே சேனைத்தலைவர் பெரிதும் வாடிய வதனத்தினராய் நின்றுகொண்டிருக்கக் கண்டான். கண்டவன் ஆச்சரிய மேலீட்டால் அப்படியே தம்பித்து நிற்க, கமலாகரர் உள்ளேவந்து வாயல் கதவினை மூடிவிட்டு சுரேந்திரன் அருகேவந்தார். சுரேந்திரன் ஏதோ பேச வாயெடுத்தான், ஆனால் அவனைத் தடுத்துவிட்டு, அவன் கையை அன்போடுபற்றி "ஜயா! நீர் ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றார், "நானா? தங்கட்கா? என்னால் என்ன செய்ய இயலும்? என்று சுரேந்திரன் ஆச்சரியத்தோடு வினாவினான்.
![]() பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது வியப்போடு தன்னைநோக்கி வினாவிய இளைஞனை கையமர்த்தி,சேனாதிபதி அவனருகே உட்கார்ந்து கொண்டு அவனைப் பார்த்து, "நண்ப, நேரமாகிறது. விஷயத்தை சுருக்கமாய்க் கூறுகின்றேன். கவனமாய்க் கேளும்" என்றார். சுரேந்திரன் அவரது வாயைப் பார்த்த வண்ணமே வீற்றிருந்தான். மீண்டும் அவர் பேசத்தொடங்கி, "நமது இளவரசர் பிரதாபனுக்கு, இன்றிரவு கடைசியாய்க் கொடுக்கப்பட்ட பானத்தில் மயக்கமருந்து கலந்துகொடுக்கப்பட்டிருக்கின்றது. அவர் மயக்கந் தௌ¤ந் தெழுந்திருக்க குறைந்தது மூன்றுநாட்களாகிலுஞ் செல்லும். ஆனால் நாளைகாலைதான் முடிசூட்டுவதாய்த் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அஞ்ஞான்றும் எப்படியும் இளவரசர் அரண்மனையிலிருத்தல் வேண்டும். பொது மக்கள் ஏற்கனவே பிரதாபன் பேரில் அருவருப்படைந் திருக்கின்றனர். இந்நிலையில் மதுபானத்தை மட்டுக்கு மீறி அருந்திவிட்டு, குடி மயக்கத்தில் ஆழ்ந்து, முடிசூட்டுதலையே அடியோடு மறந்து விட்டதாய் குடிமக்கள் எண்ணி விடுவர். இங்ஙனம் குடிவெறியில், பொறுப்புடைய இம்முக்கிய சம்பவத்தையே மறந்துவிடும் ஒருவர், தமக்கரசராய வரின், எத்தகைய நன்மையை அவரிடம் எதிர்பார்க்க முடியுமென்று குடிமக்கள் எண்ணுவதும் இயல்பே. அதுவுமன்றி, முன்னமே பிரதாபன் செய்கைகளால் உள்ளுக்குள் அருவருப்படைந்திருக்கும் இளவரசி விஜயாள், இளவரசரின் இச்செய்கையால் பெரிதும் மணமுடைந்து விடுவார். குடிமக்கள் தங்கட்கு அரசியாக வர விரும்புவது விஜய சுந்தரியையே, ஆகவே இப்போது குடிமக்களின் எண்ணமும், இளவரசி விஜயாளின் விருப்பமும் பிரதாபுக்கு விரோதமாய் மாறி விடுமாயின், அடுத்தபடி அரசராய் வரக்கூடியவர் இராகுலப் பிரபுவே. இவைகளையெல்லாம் முன்னரே ஆழ சிந்தித்தே தான். இராகுலன் தன் பணியாள் மூலமாய்ப் பிறர் சிறிதும் ஐயுறாவண்ணம் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுக்கும்படி திட்டம் பண்ணியிருக்கிறார். இந்நெருக்கடியான நிலைமையில், நீர் எங்கட்கோர் உதவி செய்யின், நாங்கள் என்றும் உமக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவராவோம்" என்றார். சிறிது நேரம் ஏதும் பேசாமலிருந்த சுரேந்திரன், கமலாகரரைப் பார்த்து, "சேனாபதியவர்களே! தாங்கள் கூறுவதை ஒருவாறுணர்ந்து கொண்டேன். ஆனால், அதற்காக நான் என்ன செய்ய முடியுமென்பதுதான் எனக்கு விளங்கவில்லை" என்றான். "வீணில் நேரம் போக்க எனக்கு விருப்பமில்லை. உருவத்திலும், பிறவற்றினும் நீர் அரசரைப் போன்றே இருக்கின்றீர். ஒருவரும் உம்மை பிறன் என்று கண்டு பிடிக்க இயலாது. அரசர் மயக்கந்தௌ¤ந் தெழுந்திருக்கும் வரையிலும் நீர் அரசராய் நடிக்கவேண்டும்! இதுதான் நீர் எங்கட்குச் செய்யக்கூடிய மாபெரும் உதவி!" என்றார் சேனாதிபதி. சுரேந்திரன் உண்மையிலேயே திடுக்கிட்டுவிட்டான். அவர் கூறியது கனவோ, நனவோவென ஐயுற்றான். தன் பக்கத்தே உட்கார்ந்திருக்கும் கமலாகரரை உற்று நோக்கி உண்மையேயென்றுத் தௌ¤ந்தான். உண்மையாயின், சிறியனும், அரசர் நடந்துகொள்ளக்கூடிய பழக்க வழக்கங்களைச் சிறிதும் அறிந்துகொள்ளாதவனும், பிறநாட்டைச் சேர்ந்தவனுமான தான், எங்ஙனம் இத்தகைய மாபெரும் பொறுப்புடைய அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுவதென நினைத்தான். இங்ஙனம் பற்பல எண்ணங்களான் குழம்பிய மனத்தோடு சுரேந்திரன் ஏதும் பேசாது நின்று கொண்டிருந்தான். "இளைஞனே! சீக்கிரம் விடைகொடும். நீர் அரசராய் நடிக்கவேண்டுவது இன்றியமையாதது. நண்பா, நீர் செய்யும் இவ்வுதவி, எங்கட்குமட்டுமல்ல: மாயாபுரியின் அரச சம்சத்திற்கே உண்டாம் சிறு சொல் நீங்கும்படி செய்ததாகும். அதுவுமின்றி அரசுரிமை பொருட்டு நேரப்போகும் கலகங்களும் உண்டாகாமல் தடுத்தவராவீர். ஆதலால் மாயாபுரியின் அரச குடும்பத்திற்கு உண்டாகப் போகும் சிறுசொல் நீங்கும்படி ஆவதைச் சொல்லும் உயிர்போன்ற என்னை நோக்கியும், தலைவன் தன் தலைமையினின்றும் வழுவும் நிலைமையை நோக்கியும் இந்த வரத்தை அருளிச் செய்ய வேண்டும்" என்று மிகவும் இரந்துவேண்டினார் கமலாகரர். "இளைஞனாகிய என்னிடத்து பெரியவராகிய தாங்கள் இங்ஙனம் வேண்டிக்கொள்ளுவதை நான் கேட்க மறுப்பதாக எண்ணவேண்டாம். திடீரென ஓர் அரசராய் நடிப்பதென்றால், அரசியல் விஷயங்களை நன்றாய் உணர்ந்த தங்களை போன்ற நிபுணர்கட்கே இலேசான காரியமல்லவென்பது தங்கட்குத் தெரியாததல்ல. அங்ஙனமிருக்க ஏதுமறியாத சிறுவனான யான், எங்ஙனம் பொறுப்புடைய ,இவ்விஷயத்தில் தலையிடுவதென்றே அஞ்சுகின்றேன். முதலாவது மந்திரி பிரதானிகள், மற்றும் அரண்மனை வேலைக்காரர்கள் முதலியோரின் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டாமா?, மேலும்,அரசர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பழக்க வழக்கங்கள் முதலியன தெரிந்திருக்க வேண்டாமா? இளவரசி விஜயாளுக்கும், இளவரசர் பிரதாபனுக்கும் ஏதும் நெருங்கிய சம்பந்தமிருக்கலாம். எதுபற்றியாயினும் நான் ஐயுறப்படுவேனாயின், அதனால் ஏற்படும் பிரதிபலன் தங்கட்குத் தெரியாததல்ல. இவையெல்லாம் தாங்கள் நன்கு சிந்திக்குபடி வேண்டுகின்றேன்" என்றான் சுரேந்திரன். "நண்பரே, நீர் கூறுவது முற்றிலும் உண்மையே. இவைகளையெல்லாம் நான் சிந்திக்கவில்லையென்று நினைக்க வேண்டாம். எவ்வளவு தூரம் ஆழ சிந்திக்க வேண்டுமோ அவ்வளவுதூரம் சிந்தித்துவிட்டேன். என்ன செய்கிறது. வேறு வழியில்லை; நீர் கூறிய எல்லா விஷயங்களையும் நான் கவனித்துக் கொள்ளுகின்றேன்; உமக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயங்களை அவ்வப்போது குறிப்பாய் அறிவிக்கின்றேன். நேரமாகிறது, தயவுசெய்து சீக்கிரம் எழுந்திரும்" என்று கமலாகரர் பிறர் மறுக்கமுடியாத ஒருவிததொனியில் கூறினார். அதற்குமேல் சுரேந்திரன் ஏதும் மொழிந்தானில்லை உடனே எழுந்து சேனாபதியைப் பின் தொடர்ந்தான். இருவரும் பல அறைகளைத் தாண்டி அரசனது படுக்கையறைகுட் சென்றனர். ஆங்கு இளவரசர் தன்னுணர் விழந்து படுக்கையின் பேரில் கிடந்தார். மெல்ல இருவரும் இளவரசரைத் தூக்கிக்கொள்ள, நம்பிக்கையுள்ள ஆயுத பாணிகளான இருவர் கையில் விளக்கேந்திய வண்ணம் மிகவும் வாடிய வதனத்துடன் அவர்களைத் தொடர்ந்தனர். ஒருவரும் வாயைத் திறவாமலே இருண்டிருந்த ஒருநிலவறை வழியாய் சென்றனர். அந்நிலவரையின் இறுதியில் அழகிய- ஆனால் மிக்க மர்மமான ஒர் அறை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வறையின்கண் போடப் பட்டிருந்த படுக்கையொன்றில் இளவரசரைப் படுக்க வைத்தனர். பிறகு வீரர் இருவரிடமும், கமலாகரர், இளவரசரை மயக்கம் தௌ¤யும்வரையிலும் மிக்க விழிப்போடு கவனித்துக்கொள்ளும்படியும், இராகுலனது வேலைக்காரர்யாரும் சிறிதும் அறிந்துகொள்ளாதவாறு மிகவும் பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ளும்படியும் அன்றைக்கு மூன்றாம் நாளிரவு தாம் அங்கு வரும்வரையிலும் அவ்வீரர்தம் உயிர்க்கே அபாயம் நேரிடினுங்கூட இளவரசரைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாதென்றும் கண்டிப்பான கட்டளையிட்டு விட்டு சுரேந்திரனுடன் அவணிருந்தகன்றனர். பின்னர், அரசர் அணியத்தக்க ஆடையாபரணங்களெல்லாம் நமது இளவலான சுரேந்திரனுக் கணிவிக்கப் பட்டது. அவனது மீசையும் எடுக்கப்பட்டது. அரசசின்னங்கள் சுரேந்திரனுக்கு புது அழகைத் தந்தன. இப்போதே சுரேந்திரன் அரசனாய் விளங்கினான். அவன் குதிரையின் மீதேறிக்கொள்ள, சேனாதிபதி மற்றொரு புரவியூர்ந்து அவன் அயலில்செல்ல மெய்காப்பாளர் இருபதின்மர் புடை சூழ, எல்லாரும் தலைநகரை நோக்கிப் பிரயாணமாயினர். அரசன் வருதலைக்கேட்ட நகரத்தார் மிகுந்த மகிழ்ச்சியடைந்து வீதிகள்தோறும் நடைக்காவணமிட்டு, கீழே பூக்களைப் பரப்பிப் பழுக்குலைக்கமுகு, குலைவாழை, கரும்பு முதலியவற்றை இரண்டுபக்கங்களிலும் முறையே கட்டி முத்துமாலைகளையும் பவழமாலைகளையும் ஆங்கங்கே நாற்றி வாயில்தோறும் தோரணகம்பங்களை நாட்டி, பெருங்கொடிகளையும் சிறுகொடிகளையுங் கட்டி பின்னும் பலவகையான அலங்காரங்களையுஞ் செய்தனர். செய்து வெந்துய ரருவினை வீட்டிய அண்ணலை இந்திரவுலக மெதிர் கொண்டாற்போல, அவர்கள் சுரேந்திரனை எதிர்கொண்டார்கள். முரசங்கள் முழங்கின; பலவகையான வாத்தியங்கள் ஒலித்தன. மகளிரும் மைந்தரும் வாயில்களில் வந்து, நின்று அரசனைக்கண்டு கண்குளிர்ந்து மனங்களித்து "எங்களுடைய துன்பமாகிய இருளைப் போக்குதற்குச் சூரியன்போலவே தோன்றிய பொங்குமலர்த் தாரோய்! புகுக" என்பாரும், "காணுதற்கரிய கட்டழகியான விஜயாளை மணந்து, கண்கள்பெற்ற பயனையடையும்படி செய்யும் மன்னர் மன்னன் மன்னுக" என்போரும், தத்தமக்குத் தோன்றியவாறே இன்னும் இவைபோன்ற பலவற்றைச் சொல்லுபவர்களுமாய் அங்கங்கே நிற்க, சுரேந்திரன் அமராபதியிற்புகும் இந்திரன்போல நகரத்திற் புகுந்து அரண்மனையை யடைந்தான். அங்கு அரசனை வரவேற்கும் பொருட்டு, பிரபுக்களும், அல்லாத பிறரும் குழுமியிருந்தனர். "அரசர் பிரதாபனுக்கு ஜே" கோஷம் அரண்மனை முற்றும் தொனித்தது. எங்கணும் வாழ்த்தொலி நிரம்பியது. மேளவாத்தியங்கள் கடலொலிபோல் ஆர்ப்ப, பெரியோர் ஆசி கூற, மாயாபுரியின் அரசனாக சுரேந்திரன் முடிபுனையப் பெற்றான். சற்று நேரத்திற்கெல்லாம் அரசிளங்குமரி விஜயாள், தோழியர் புடைசூழ அரசவைக்கு வந்து மன்னர் மன்னனாய் வீற்றிருக்கும் சுரேந்திரனுக்கு முழந்தாட்பணிந்தெழுந்தாள். எழுந்த அதேசமயம், சுரேந்திரனின் கண்களும் இளவரசியின் கண்களும் ஒன்றையொன்று நோக்கின. அக்கோமகளின், எழுதற்கும் எண்ணுதற்குமரிய பேரழகு, சுரேந்திரனை திக்பிரமையடையும்படி செய்தது. அவ்வமயம் பொறாமையோடுகூடிய இருகண்கள் அரசனையே உற்று நோக்கின.
![]() இயற்கையன்னையின் இன்பவிளையாடல். முந்திய அத்தியாயத்திற் கூறப்பட்ட முடிசூட்டு வைபவம் நிகழ்ந்த மறுநாள் இரவு மணி ஒன்பதிருக்கலாம், மாயாபுரியின் அரசவீதியிலுள்ள அழகியதோர் மாளிகையின் அறையொன்றில் எறக்குறைய 19 - ஆண்டே நிரம்பிய எழில்மிகு யுவதியொருத்தி, சார்மணைக்கட்டிலொன்றில் சாய்ந்தவண்ணம் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் தன் மனம் முற்றையுஞ் செலுத்தியபடி உடகார்ந்திருந்தார்கள். அவள் கையில் ஏதோ ஓர் நாவல்புத்தகம் இருந்ததெனினும் அவள் அதை படித்ததாக தெரியவில்லை அவ்வமயம் அறைக்கதவைத் திறந்து கொண்டு மற்றோர் பெண்மணி உள் நுழைந்தாள். வந்தவள் தன்னை சிறிதும் கவனியாமல் வீற்றிருக்கும் பெண்மணியருகிற் சென்னு தலைவணங்கினாள். அப்போதுதான் அவள் ஏறிவிட்டு நோக்கினாள். வந்தவள் மிகவும் பணிவாக,"தங்களின் சிந்தனைக்கு என்னால் எதும் இடையூறு ஏற்பட்டதாயின் மன்னிக்கமாறு பிரார்த்திக்கின்றேன்" என்றாள். "அப்படியொன்றுமில்லை. நான் இப்போது யோசித்துக்கொண்டிருந்தது நமது அரசரைப்பற்றியே. ஏற்கெனவே அவர்மாட்டு எனக்குச் சிறிதுகூட அன்பில்லையென்பதை நீ நன்றாயறிவாய். ஆனால் நேற்றுமுதல் எனக்கு அவரிடத்து என்னையறியாமலே அன்பு ஊறுகின்றது. அதற்குக்காரணம் எனக்கே தெரியவில்லை. எத்தனையோ முறை, முன்னமே அவர் வேண்டிக்கொண்ட பொழுதெல்லாம் இன்னஞ் சிறிதுநாள் போகட்டுமென்றே கூறிவந்தேன். ஆனால் நேற்றுமுதல் என் மனநிலையே வேறாக மாறிவிட்டது. கிரீடம் அவர்க்குத் தனியழகைத் தரவில்லையா? என்றாள் யுவதி. வந்தவள் மிக்க மரியாதையோடு, "ஆம், பொருமாட்டியே,நேற்றுமுதல் அவர் புதிய அழகோடுதான் விளங்குகின்றார். கிராமக்காற்று அரசர் பெருமானுக்கு நலத்தையளித்தது போலும்" என்றாள். "இருக்கலாம் அவரது குணம், செய்கை முதலியனவும் மாறுபட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதுவன்றி அவர் முந்தியைவிட இளமையுடையார்போன்று தோன்றுகின்றார்" என்றாள் பெருமாட்டி. "உண்மையே நான் கூற எண்ணியதையே தாங்களுங் கூறினீர்கள். அவர்தங் குரலுங்கூட முந்தியைவிட காதுக்கினிமையைத் தருகின்றது" என்றாள் வந்தவள். "வனஜா, நீயும் நன்கு கவனித்திருக்கின்றாய். சரி,நேரமாகிறது. நேற்று அரசர் என்னிடங்கேட்டுக்கொண்ட படி அவரது அரண்மனைக்கு நாம் செல்ல வேண்டும். வண்டி தயாராகிவிட்டதா என்று பார்த்துக்கொண்டு சீக்கிரம் உடையுடுத்திக்கொண்டு வா. அதற்கிடையில் நானும் தயாராயிருக்கிறேன்" என்று பெருமாட்டி கூற, அக்கட்டளையைப்பெற்ற அவளது தோழி வனஜா, அதை விரைவில் முடிப்பாள் வேண்டி அவ்விடத்தைவிட்டும் சடுதியில் சென்றாள். இவர்கள் நமது இளவரசி விஜயசுந்தரியும் அவள் தன் தோழியுமென்பது நாம் கூறாதே யமையும். சிறிது நேரத்திற்கெல்லாம் அவளது தோழி களிரிருவரும் பின்தொடர்ந்தனர். மூவரும் வண்டியேறி, அவ்வழகிய வீதியின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அரண்மனைக்குச் சென்றனர். அங்கு கமலாகரர் முதலியோர் எதிர் வந்தழைத்துச்சென்று, ஓர் விசாலமான அறையுள் விடுத்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் சுரேந்திரன் ஆங்குதோன்றி இளவரசியை அன்போடு வரவேற்றான், இருவர் கண்களும் ஒன்றையொன்று நோக்கின.கண்ணோடு கண் நோக்கின் வாய் சொற்களால் ஏதும் பயனிலவன்றே? சுரேந்திரன் மிக்க அன்போடு "இளவரசி! யான் இதுவரையிலும் உம்மைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேனென்று கூறின். நீர் வியப்படைய மாட்டீரென்று நம்புகிறேன்.தாம் இத்துணை தாமதமாக வந்ததற்கு எது காரணமோ"என்றான். அதற்கு விடையாக, "அரசர் பெரும! உண்மையைக் கூறப்புகின் நேற்று முதல் என்மனம் ஒருநிலையிலில்லை அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். வேறு விசேஷ மொன்றுமில்லை" என்றாள் இளவரசி. சுரேந்திரன் எந்த பெண்மணிகளோடும் நெருங்கிப் பழகியவனல்லன். ஒரு பெண் பிள்ளையிடத்து அவனுக்கு அன்புண்டு என்று கூறினால் அவள் அவனது அண்ணியாகவே யிருக்கலாம். ஆனால், இப்போது விஜய சந்தரியைக் கண்டது முதல், எப்பெண்களிடத்தும் தோன்றாத அன்பு அவள் மாட்டு தனக்குண்டாவதாய் எண்ணினான். ஆயினும், அரசர் பிரதாபனுக்கு உரியளாய்க் கருதப்பட்ட விஜயாளோடு நெருங்கிப்பழக அவனது தூய்மையான மனசாட்சி இடங்கொடுக்கவில்லை. எனினும், கமலாகரர், சுரேந்திரன் விஜயாளோடு நெருங்கிப்பழகாவிடின் அவள் ஐயுற நேருமென்றும், ஏற்கனவே பிரதாபை வெறுப்போடு நோக்கி வந்தவளான இளவரசி, தானே நெருங்கிப் பழக வரும்போது, சுரேந்திரன் அதற்கிடங்கொடாவிடின் ஆழ்ந்த அறிவுள்ளவளான விஜயாள், ஒருகால் உண்மையை உணர்ந்துகொள்ளக் கூடுமென்றும் எச்சரித்தார். தர்ம சங்கடமான காரியத்தில் தான் நன்றாய் அகப்பட்டுப்கொண்டதாய் நினைந்த சுரேந்திரன், இன்னும் ஒரு நாள் எவ்வாறு கழியுமோவென்று ஏங்கி, இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான். விஜயாளின் மறுமொழியைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாயிருந்த சுரேந்திரன், மீண்டும் அவளோடு உரையாடத் தொடங்கி, "பெருமாட்டி! நேற்று முதல் உமது மாசற்ற மனத்திற்கு தொந்தரையைத்தரும் மாற்றத்தை நானறிந்துகொள்ளலாமா? என்னால் கூடுமாயின் உமக்கு மன அமைதி ஏற்படும்படி செய்வேன்" என்றான். சுரேந்திரனது மொழிகள் விஜயாளது உள்ளத்திற்கு பெரிதும் மகிழ்வையளித்தன. அவர் சுரேந்திரனை தனது அன்பு வழியுங் கண்களால் அமைதியோடு நோக்கி "அத்தான்! தாங்கள் கிராமத்திற்குப் போகுமுன்னிருந்ததை விட, இப்போது எவ்வளவோ மாறுதல் அடைந்திருக்கின்றீர்கள் அல்லவா?" என்றாள். அவள் தன் உள்ள கருத்தை ஒருவாறுணர்ந்து கொண்ட சுரேந்திரன், அவளை நோக்கி, "இருக்கலாம், நேரமாகிறது, ஏதாவது சாப்பிடவேண்டாமா?" எனக் கூறி பேச்சைமாற்றி வேறோர் அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு மேசையொன்றில், மடைத்தொழில்வழுவாத வாழ்க்கையரான் சமைக்கப்பெற்ற அமுதினன்ன அடிசிலும் நெய்யாலாக்கிய சிற்றுண்டிகளும் வெள்ளித் தட்டுகளில் அழகுபெற பரத்திவைக்கப்பட்டிருந்தன. கண்ணாடி எனங்களில் பலவகையான பழவகைகள் கண்ணுக் கினிமையாய்த் தோன்றும்படி போடப்பட்டு மேஜையின் மற்றொரு புறத்தே வைக்கப்பட்டிருந்தன. அங்கு அழைத்துச்செல்லப்பட்ட இளவரசியும் அவளது தோழிகளிருவரும், இன்னும் இரண்டொரு பிரபுக்களும், சேனைத்தலைவர் கமலாகரரும், சுரேந்திரனும் மிக்க மகிழ்ச்சியோடு உரையாடிக்கொண்டே உணவருந்த ஆரம்பித்தனர். உணருவருந்தியபின், விஜயாளின் விருப்பத்திற்கிணங்கி சுரேந்திரன் அவளோடு தோட்டத்தில் உலாவச் சென்றான். இருவரும் ஏதோ அரசியல் விஷயமாய்த் தோட்டத்தில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சுரேந்திரன் எத்துணைதான் சேனைத்தலைவர்கூறி யாங்கு விழிப்போடு நடந்துகொண்டபோதினும், சிற்சில விஷயங்களில் தவறியே நடந்துவந்ததை மிக நுணுக்கமாய் விஜயசுந்தரி கவனித்து வந்தாள். நிற்க, தோட்டத்தில் நெடுநேரமாகி விட்டதால் இருவரும் அவ்விடத்தை விட்டும் அரண்மனைக்கு வந்து அவரவர்தம் படுக்கையறையுட்சென்று படுத்துக்கொண்டனர், சுரேந்திரன் படுக்கையிற் படுத்துக்கொண்ட போதினும் அன்றிரவு தூக்கமே யில்லாதொழிந்தது. விஜயாளின் இனிய மொழிகளும், சிறந்த குணங்களும், எழிலே ஒருக்கொண்டற் போன்ற அவளது தோற்றமும், தன்னிடத்து அவள்காட்டும் உண்மையான அன்பும் அவனது ஐம்புலன்களையும் ஒருங்கே மயக்கி ஆனந்தமுறச் செய்தன. ஆனால், அவனது மனசாட்சி இடைக்கிடையே அவள் பிறனொருவன் பொருளன்றோ' என ஞாபகமூட்டி அவனைக் கலக்கமுறச் செய்தது. இங்ஙனம் பற்பல எண்ணங்களான் குழப்பப்பட்ட மனத்தோடு சுரேந்திரன் ஒருவாறு அவ்விரவை யோட்டி காலையில் எழுந்தான். தனக்கு முன்னதாகவே விஜயாள் எழுந்து தனக்காகக்காத்திருக்கிறா ளென்பதை பணிமகன் மூலமாய் அறிந்த நமது சுரேந்திரன் உடனே எழுந்து காலைக்கடன் கழித்து இளவரசி யிருக்குமிடத்திற்குச் சென்றனன். அவனை கண்டதும் மலர்ந்த முகத்தோடு விஜயம் அவனை வரவேற்றாள். பிறகு அவனைப் பார்த்து "என் அரசே ! ஏன் தங்கள் அழகிய கண்கள் சிவந்திருக்கின்றன. இன்றிரவு தாங்கள் நன்றாய் அயர்ந்து தூங்கவில்லையோ? என்றாள். "பெருமாட்டியோ! நீர் கூறியது உண்மையே. இன்றிரவு எனக்கு நன்றாய்த் தூக்கம் வரவில்லை தான்" எனக் கூறிவிட்டு காலையாகாரம் அருந்தும் பொருட்டு அவளையும் அழைத்துச் சென்றான். காலை மணி 10 இருக்கலாம். அரண்மனையின் கண்ணுள்ள விசாலமான அறையொன்றில் நமது கதாநாயகன் சுரேந்திரனும், கதாநாயகி விஜயாலும் மெத்தை தைக்கப் பெற்ற நாற்காலிகளில் அமர்ந்தவண்ணம் மிக்க உல்லாசமாய்ப் பேசிக்கொண்டிருந்தனர். சுரேந்திரன் மகிழ்ச்சியே மயமாய்ப் பேசிக்கொண்டிருந்தபோதினும் அவனது மனம் சஞ்சல மடைந்தபடியே யிருந்தது. 'இன்று பகல் மட்டுந் தானே இவளோடிருப்போம்' என்ற எண்ணம் அவனுக்கு உண்டாக அவன் மனம் சொல்லொணாத் துயரடைந்து 'படபட' வென்றடித்துக்கொண்டது. அந்நிலையில் காவலன் வந்து தலைவணங்கினான். 'மாட்சிமைதங்கிய மன்னர் பெருமானே! தங்களைக் காணும்பொருட்டு இராகுலப்பிரபு வந்திருக்கின்றார்" என நவின்றான் அக்காவலன். "அங்ஙனமாயின் நான் உடனே வருகின்றேன்" என்று சுரேந்திரன் கூறி விடை கேட்கும் பாவனையாக இளவரசியின் முகத்தை நோக்கினான். அவனது விபரீதப் போக்கு இளவரசியால் சிறிதும் விளங்கிக்கொள்ளக் கூடாததாகவே இருந்தது. "என் அரசே! தாங்கள் இவ்வூரைப் புரக்கம்புரவலன் என்பதை மறந்துவிட்டீர்களா? அரசரைப் பார்க்கவருவோர் அரசர் இருக்குமிடத்திற்கு வருவரா? அன்றி அரசர் அவர் இருக்கு மிடத்திற்குச் செல்லுவரா?" என்று சற்று சினத்துடன் கூறினாள் இளவரசி. அரசர் நடந்துக்கொள்ளக்கூடிய பழக்கவழக்கங்களைச் சிறிதும் அறிந்துக்கொள்ளாத சுரேந்திரன், விஜயாள் கூறிய வார்த்தைகளால் விழிப்படைந்தான். அவள் கையைமிக்க ஆர்வத்தோடுபற்றி, "பெருமாட்டி, ஆம் நான் அரசனென்பதை உமதருகிலிருக்குங்காலை மறந்து விடுகின்றேன்." எனக்கூறி காவலனை விளித்து, "இராகுலப்பிரபு பிரபுவை உடனே இங்கு வரும்படி சொல்" என்ன, காவலனும் உடனே அங்கிருந்தும் வெளியே சென்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் இராகுலப்பிரபு ஆங்கு தோன்றினார். முடிசூட்டி வைபவத்தின்போது பொறாமையோடு அரசனை உற்றுநோக்கிய அதே கண்கள், மீண்டும் பொறாமையோடு கூர்ந்து நோக்கின. உடனே எரிமலையின் அகட்டுத் தீமூண்டெழுந்தாற்போல, இராகுலனது முகத்தில் ஒருவகைத் தீயொளி பரவியது. ஆனால் மறுவினாடியே அது மறைந்துவிட்டது. சுரேந்திரன் பிறன் என யாரும் சிறிதும் ஐயுறாதிருந்துங் கூட, மிகக் கூறிய கண்களையுடைய இராகுலன் இப்போது அரசனாய் விளங்கும் சுரேந்திரன் அரசன் பிரதாபனல்லனென்று தெற்றென விளங்கிக்கொண்டான். அங்ஙனமாயின், அரசனாய் நடிக்கும் இவன் யார்? என்ற எண்ணம் அவன் மனத்தைக் கலக்கியது. சுரேந்திரனோடு சுற்றுநேரம் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு இராகுலன் அவ்விடத்தைவிட்டும் அகன்றான். பின்னர் இளவரசியும், சுரேந்திரனும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தனர். செல்வி விஜயாள் இம்மூன்றுநாட்களாய் அரசனிடங் காட்டிய பேரன்பு, எல்லாரையும் வியப்புக் கடலுள் மூழ்கும்படி செய்தது. இனி வெகுசீக்கிரம் இளவரசியை அரசியாகக் கண்டுகளிக்குந் தருணம் கிட்டும் என்று மக்கள் ஆனந்த மெய்தினர். இவ்வாறு பகற்பொழுது கழிய சூரியன் அஸ்தமித்தது: முல்லை மலர்ந்தது; தாமரைகள் குவிந்தன. மணி ஆறடித்தது. இளவரசி தன் மாளிகைக்குச் செல்ல சுரேந்திரனிடம் உத்தரவு கேட்டாள். இதுவே அவளது கடைசி சந்திப்பாயிருக்குமென்றண்ண அவனது கண்கள் கலங்கின. நீண்ட பெருமூச்சோடு அவட்கு விடையளித்தான். நேரம் சென்றுகொண்டே யிருந்தது. அன்றிரவு அரண்மணை மணி 11 அடித்தது. எங்குபார்க்கினும் பேரிருள் சூழ்ந்திருந்தது. அப்போது கமலாகரரும் இரண்டு வீரர்களும் சுரேந்திரனிடத்து வந்தனர். அவ்வீரர்களிடத்து கமலாகரர், சுரேந்திரனது படுக்கையறைவாயிலே மிக்க எச்சரிக்கையோடு காவல் புரியும்படி, தாம் இங்குவரும் வரையிலும் மந்திரியே ஏதும் அரசியல் விஷயமாய் அரசரைப் பார்க்க விரும்பிய போதிலும் உள்ளே விட வேண்டா மென்றும் மிகக் கண்டிப்பான உத்தரவிட்டார், அப்பால் இருவரும் பாராவண்ணம் மறைந்ததுமறைந்து, அழகிய-ஆனால் வேகமாய் ஒடக்கூடிய குதிரைகளில் அமர்ந்தவண்ணம் இராகுலனது வன மாளிகையை நோக்கிச் சென்றனர். இராகுலப் பிரபுவின் வனமாளிகையின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த மணி யறிவிக்குங் கருவி 'டாங் டாங்' கென மூன்றடித்தது. ஆடவிரிருவர் அம்மாளிகையினுட் சென்றனர். எங்கு நோக்கினும் மனித ரிருப்பதின் அடையாளமே காணப்படவில்லை. அவ்விடத்துச் சென்ற ஆடவரிருவரும் முன்னர் கூறப்பட்ட நிலவறையின் வழியாய் விரைவாக மர்ம அறைக்குச் சென்றனர். அவ்வறையினருகிற் சென்றதுமே இருவர் தம் மனமும் ' படக் படக்' கென அடித்துக்கொண்டது, ஏன்? அங்கு காவலிருந்த வீரரிருவரையுங் காணோம். ஒருவாறு மனத்தை திடப்படுத்திக்கொண்டு உள்ளே சென்று பார்க்க, அங்கு படுக்கையிற் படுக்கவைக்கப்பட்டிருந்த அரசன் பிரதாபனைக் காணவில்லை, வேறு அங்கு என்ன கண்டனர்? அரசன் பிரதாபனது இரத்தம் படிந்த ஆடைகளையே! பேரிடியே தலையில் விழுந்தாற் போன்று இருவரும் அசைவற்று நின்றுவிட்டனர். இவ்வாண் மக்களிருவரும் நமது கதாநாயகன் சுரேந்திரனும், சேனைத் தலைவர் கமலாகரருமே யாவர் என்பது யாம் கூறாமலே வாசகர் கட்கு இனிது விளங்கும்.
![]() திடுக்கிடும் செய்தியும் தியங்கிய மனமும் கமலாகரரும் சுரேந்திரனும் சிறிதுநேரம் வரையிலும் ஒருவரோடொருவர் ஏதும் பேசவில்லை பிறகு சுரேந்திரன் சேனைத் தலைவரை விளித்து, "அரசரைத் தான் காணோமென்றால் நாம் காவல் வைத்துச் சென்ற வீரர்கள் எங்கு போயினர்? ஏதுங் கைக்கூலி பெற்று காட்டிக் கொடுத்துவிட்டனரா?" என்றான். "ஒருக்காலும் அப்படிச் செய்திரார். மிக்க நம்பிக்கையுள்ளவர்கள். மேலும் அரசரிடத்து ஆழ்ந்த அன்புடையவர்கள் " என்றார் சேனைத் தலைவர். "அங்ஙனமாயின், அவர்கள் எங்கு சென்றிருப்பர் " என்றான் சுரேந்திரன். சேனைத் தலைவர் ஏதும் பதில் மொழிந்தாரில்லை. ஆழ்ந்த சிந்தனையோடும் அளப்பரிய துயரத்தோடும் செய்வதியாதெனத் தெரியாது ஒய்ந்து உட்கார்ந்துவிட்டார், சுரேந்திரன் மட்டும் கையில் விளக்கேந்திய வண்ணம் மாளிகை முழுதுஞ் சுற்றிவந்தவன், ஓரிடத்தில் நின்று வீரிட்டலறினான். அங்ஙனம் அவன் அலறிய இடத்தை நோக்கி சேனாதிபதி விரைந்துசென்றார், ஆங்கு அவர்கள் கண்ட காட்சி, அவர்கள் மனத்தைத் திடுக்கிடும்படி செய்தது. அரசன் பிரதாபை காவல் புரியும்படி சேனாபதியினால் வைத்துச் சென்ற வீரர்களிருவரும் கை கால் முதலியன பிணிக்கப்பட்டு கீழே கிடைத்தி வைக்கப் பட்டிருந்தனர். உடனே கட்டுகள் நீக்கப்பட்டன. ஆயினும், அவ்வீரரிருவரும் சோர்ந்து உணர்வற்றிருந்தனர். அவர்கள் முகத்தில் மெல்ல விசிறி தண்ணீர் அருந்தும்படி செய்த பின்னர், அவ்வீரர்கள் இழந்த உணர்வை மீண்டும் பெற்றனர். அவர்கள் உணர்வடையப்பெற்றதும் கமலாகரர் அரசனைப்பற்றி உடனே மிகக் கண்டிப்பான குரலில் வினாவினார். அவர்களிருவரும் தங்கள் கையினால் முகத்தை மூடிய வண்ணம் தேம்பித் தேம்பி அழுதனர், இங்ஙனம் அவர்கள் அழுவதைப் பார்த்து பிரதாபனுக்கு ஏதோ ஒரு துன்பம் வந்துவிட்டதென்று நிச்சயித்து அறிவு மயங்கி சோர்ந்து விட்டனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சுரேந்திரனும் கமலாகரரும் செய்வதியாதெனத் தெரியாது அறிவு மயங்கி நின்றுகொண்டிருந்தனர். "வீரர்களே, நேரமோ போய்க்கொண்டிருக்கின்றது. தாமதிக்காமல் உண்மையான விவரங்களைக் கூறினால். மேலே நடக்கவேண்டிய விஷயங்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம் " என்றார் கமலாகரர் "சேனாதிபதியவர்களே, உண்மையான விவரங்களைக் கூற எங்கள் நா எழவில்லை. தாங்கள் பணித்தவாறே அன்றுமுதல் இன்றிரவு மணி 11 வரையிலும் மிக்க விழிப்போடு அரசரைக் காவல்புரிந்து வந்தோம். திடீரென முகமூடி யணிந்த அறுவர், எங்களை எதிர்த்தமையானும், அவர்கள் அறுவரா யிருந்தமையானும் எங்களால் ஒன்றுங் செய்ய முடியவில்லை. ஆயினும், எங்கள் உயிரைக் கொடுத்தோனும் அரசரைக் காக்கமுயன்றோம். அவர்களில் ஒருவன் கூட எங்கள் வாட்கிரை யாயினன்---------" என்று முதற் காவலன் கூறி வரும்போது சேனாதிபதி அவனை இடைமறுத்து. "மற்றவர் அரசரைத் தூக்கிச் சென்றனரோ?" என்ன, அவ்வறுவரில் ஒருவரேனும் உங்கட்கத் தெரிந்தவர்களாயில்லையோ? அவர்களது தோற்றம் எப்படிப்பட்டதென்பதை யாயினும் நீங்கள் கவனித்திருப்பீர்களல்லவா?" என்று கமலாகரர் அவர்களிடம் மீண்டும் வினாவினார். "இல்லை, அவர்கள் முன்னெச்சரிக்கையோடு தங்கள் உடம்பு முழுதும் மறைக்கும் நீண்ட அங்கியணிந்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் தலைவனாய்த்தோன்றியவரது குரல், எத்துனை மாற்றிப்பேசிய போதிலும் இராகுலனுடையதைப் போன்றே காணப்பட்டது" என்றான் காவலன். சற்று நேரம் ஏதோ சிந்தித்திருந்த கமலாகரர் சரேந்திரனை நோக்கி "சரி. இனி அதிக விவரஞ் சொல்லவேண்டியதில்லை. நேரமாகிறது. சுரேந்திர! இராகுலானே அரசரைத் தூக்கிச் சென்றிருக்க வேண்டும். ஒருக்காலும் அவன் அரசரைக் கொலைசெய்ய முயலான். அங்ஙனம் அவன் அரசரைக் கொலை செய்துவிட்டால் தனது நிலைமை இன்னம் மோசமாகிவிடுமென்பதை மதியூகியான இராகுலன் நன்கு உணர்ந்திருக்கலாம். ஆகவே, அரசர் கொல்லப்பட்டுப் போகவில்லையென்பது நிட்சயம். உயிரோடு கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் அரசர் கொலை செய்யப்பட்டுப் போனதாய், நினைத்து அரசரைத்தேடும் முயற்சியில் இறங்காமலிருக்க வேண்டுமென்னங்கருத்தோடுதான், பிரதாபனது ஆடைகள் இரத்தத்தில் தோய்க்கப்பட் டிருக்கின்றன. அன்பான சுரேந்திர, இப்பொழுது உண்மை உனக்குந் தௌ¤வாய்ப் புலப்பட்டிருக்கும். அதிகநேரம் யோசிக்க வியலாது. நீ இந்த மூன்று நாட்களாய் எங்கட்கு செய்திருக்கும் உதவி என்றென்றும் மறத்தந்கியலா. அரசரை மறைமுகமாகவே நாம் தேடி கண்டுபிடிக்கும் வரையிலும் நீயே பிரதாபன் அகப்படாமலே போய்விடின், அல்லது கொல்லப்பட்டு போய்விடின் எப்பொழுதும் நீயோ மாயாபுரியின் மணிமுடி புனைந்து, மன்னனாகத் திகழலாம். கோமகள் விஜயாளும் உன்னை விரும்பி மணந்துகொள்ளுவாள்.கைம்மாறு கருதாது மழையை சொரியும் கார்முகிலேபோல, நீ எங்கட்குச் செய்யும் இப்பேருதவி எங்களால் ஞான்றும் - மறத்தற்கியலா" என்று மிக்க உருக்கமாய்ப்பேசினார். சுரேந்திரன் ஏதோ பேச வாயெடுத்தான். ஆனால், சேனைத்தலைவர் அதற்கு இடமளித்தாரில்லை. அதுவன்றி, இளவரசி விஜயாளும் உன்னை விரும்பி மணந்து கொள்ளுவாள்" என்று கூறிய கமலாகரரின் மொழிகள், சுரேந்திரனை ஆனந்தக்கடலில் ஆழ்த்தின. அவ்வாறான பாக்கியமும் தனக்கு கிட்டுமோ என்றேங்கினான். கிரீடம் தனக்குக் கிடைப்பதைப்பற்றி அவன் மனம் ஆனந்தமுறவில்லை. இளவரசி தனக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற விஷயமே அவனை பெரிதும் மகிழ்வித்தது. ஆயினும், உடனே பிரதாபனின் பரிதாபகரமான வதனம் அவன் அகக் கண்கட்கு புலனாயிற்று. அவனது பொருளான விஜயாளை தான் விழைவது பெரிதும் தவறென நினைத்தான். எங்ஙனமாயினும் அரசர் பிரதாபனைக் கண்டு பிடித்து அரசுரிமையை அவரிடம் ஒப்பித்துவிடுவதே சாலச்சிறந்த தென்று எண்ணினான். தான் பிரதாபனுக்கு பதிலாக அரசுரிமை ஏற்று, அரசனாய்த் திகழ்ந்தால் இளவரசி விஜயாளின் விலக்க முடியா நேசத்திலிருந்து தன்னை எங்ஙனம் காப்பாற்றிக்கொள்ள இயலுமென்பதே அவனது முக்கிய பிரச்சனையாய் இருந்தது. அன்றியும் ஒரு நாட்டைப் புரக்கும் புரவலனாக விருக்கத்தக்க யோக்கியதையும் ஆண்மையும் எனக்கு உண்டா? என்பதை முகற்கண் நான் பரிசீலனைசெய்து பார்க்கவேண்டும். காவலன் தொழில் இலேசானதல்ல. வரியை வசூலிப்பதும், வசூலித்த வரிப்பணத்தைவிருப்பப்படி செய்து இறுமாந்திருப்பதும் அரசனுடைய இலக்கணங்களல்ல. அரசருடைய பொறுப்புக்கள் அளவிளடங்காதன' என்று சுரேந்திரன் பலவாறு சிந்தித்தான். சிந்தித்து, செய்வதியாதெனத் தோன்றாது கவலை கொண்டவதனத்தோடு ஏதுமே பேசாது நின்று கொண்டிருந்தான். நுண்ணிய அறிவுடைய சேனைத்தலைவர் அவனது உள்ளப்பான்மையை ஒருவாறு ஊகித்துணர்ந்து கொண்டார். ஆயினும் ஒன்றுங் கூறாமல் சுரேந்திரனது கையினைப் பற்றினார். சுரேந்திரனும் ஏதும் பதில்மொழிந்தானில்லை வாய் பேசாது கமலாகரரைப் பின் தொடர்ந்தான். கமலாகரர் வீரரிருவரையும் காலையில் வருமாறு பணித்து, சுரேந்திரனோடு வெளியே வந்து, பரிமாயூர்ந்து தலைநகரை நோக்கிக் கடுகிச் சென்றனர்.
![]() அன்புள்ள அரசன் அதிசயக் கடிதம் முந்திய அத்தியாயத்திற் கூறப்பட்ட திடுக்கிடும் நிகழ்ச்சி நிகழ்ந்து மூன்று மாதங்கள் கடந்தன. அரசர் பிரதாபனை எத்துணையோ ஆட்களை விட்டு பிறர் அறியா வண்ணம் மர்மமாய்த் தேடிய போதிலும் எதும் பயனளிக்க வில்லை. ஆயினும், கமலாகரரும் சுரேந்திரனும் ஊக்கத்தோடு தேடுவதை விட்டுவிடவில்லை. பின்னும் பின்னும் முயற்சி செய்வாராயின். அரசர் பிரதாபன் அகப்படுதற்குரிய சிறுதடயமுங் கிடைக்கவில்லை. நமது கதாநாயகனும் கமலாகரரும் என்ன செய்வதெனத் தோன்றாது மிகவும் கவலையோடு காலங் கடத்தினர். இதற்கிடையில், அரசிளங்குமரி விஜயம் சுரேந்திரனிடத்து நாளுக்கு நாள் அளப்பரிய அன்பு பாராட்டி வந்தாள். தந்நலங்கருதாது பிறர் நலத்தையே கருதும் இயல்பினனான சுரேந்திரன், தன்னடக்கத்துடன் சற்று விலகியே நடந்து கொண்டபோதினும் அவளது ஒப்பற்ற அன்பை அவனால் முற்றும் புறக்கணித்துவிட முடியவில்லை, அவனும் அவளை முழுமனத்தோடு நேசித்தான். ஆயினும். இளவரசியிடம் அவன் தன் மனத்தை வெளிப்படையாய்த் திறந்து காட்டவில்லை. சுரேந்திரன் செங்கோலைக் கைக்கொண்டு ஒருமாதம் வரையிலும் அரசியலை நிர்வகிக்கக்கூடிய போதிய திறன் உண்டாகவில்லை. எனினும் பிறகு, மாயாபுரி மக்களின்முன்னேற்றத்திற்கான பல காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டான், 18 வயதிற்குமேல் 45 வயதிற்குள்ளடங்கிய ஒவ்வொரு ஆண்மகனுக்கும் புத்தப் பயிற்சி அளித்தான். மக்கட்கு கல்வியில் ஆர்வத்தை யூட்டினான். வைத்திய வசதிகளையும், பயிர்த்தொழில். குடிசைக் கைத்தொழில் முதலியவற்றில் விருத்தியையும் அவன் பெருக்கினான். சுரேந்திரன் தன்னுடைய முழு கவனத்தையும் தங்கள் முன்னேற்றத்தில் ஈடுபடுத்தியதைக் கண்ட நாட்டுமக்கள், அவனை அன்போடு நேசித்து வந்தனர். பெண்ணினத்திடத்து அவனுக்குள்ள அளவுகடந்த அபிமானத்தினால் பெண்களின் விடுதலைக்கென உழைத்தான். பெண்மணிகளின் விடுதலையின் மூலமாகவே, நாட்டின்முன்னேற்றமும் சித்திபெறுமென்பது அவனது திடமான நம்பிக்கை. எந்த சமுகம் பெண்மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றதோ, அந்த சமூகம் ஒருகாலத்தும் தலைநிமிர்ந்து நிற்கமுடியாதென்பது அவனது கொள்கை, 'ஒரு சமூகத்தின் வாழ்வும், தாழ்வும், உயர்வும், வீழ்ச்சியும் அதனுடைய பெண்களைப் பொறத்தவைகளாயிருக்கின்றன வென்பது மறுக்க முடியாத உண்மை. ஏன்? பெண்ணினம் சாதாரணமானதல்ல. அவர்கள் எதிர்கால மக்களின் தாய்மார்கள். சமூகத்தின் அபிவிர்த்தி அவர்கடம் கைவசமிருக்கின்றது' என்றெல்லாம் அவன் அடிக்கடி எண்ணுவான். ஆகவே, அவன் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தீவிரமாக உழைத்தான். சுரேந்திரனால் பல பெண் பள்ளிக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன. பெண் மக்களின் உயர்தரப் படிப்பின் பொருட்டு பல கல்லூரிகளும், அனாதையாச்சிர மங்கள், பெண்மக்கட்கென தனியே மருத்துவச் சாலைகள் முதலியனவும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி கற்க சக்தியற்ற ஏழை மாணவர்கம்கென பல கல்விச் சாலைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன. கழகங்களென பெயரளவிற் கூறிக் கொண்டு திங்கள்தோறும் முறைபோட்டு சோறாக்கி பணக்காரரெனப் படுவோரெல்லாம் ஒன்றுகூடி உண்டுகளிக்கும் வழக்கங்கள் நீக்கப்பட்டு உண்மையும் தூய்மையுங் கொண்ட உறுப்பினரையுடையவைகளாக மன்றங்கள் மிளிர்ந்தன. சுருங்கக் கூறுமிடத்து. மாயாபுரிமக்கள் இதுவரை கண்டிராதவாறு சுரேந்திரன் செங்கோல் செலுத்தி வந்தான். குடிமக்கள் அரசனை வாழ்த்தினர். மந்திரி பிரதானிகள் போற்றிப் புகழ்ந்தனர், மாற்றார் வெருவினர் நாட்டில் அமைதி நிலவியது. இந்நிலையில், குடிமக்களும் மந்திரிப் பிரதானிகளும் உற்றார் உறவினரும் செல்வி விஜயாளை மணந்துகொள்ளாது அதிக நாட்கள் தாமதிக்கக் கூடாதென சுரேந்திரனிடம் பெரிதும் வேண்டிக்கொண்டனர். அதற்குக் காரணம் அவள் அரசர்க்கருகே அரசியாக அரியனையில் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழும் பொருட்டே. இந்நெருக்கடியான நிலைமையை சமாளிக்க முடியாமல், கடமையே தங்கள் வாழ்க்கையின்பமெனக்கொண்ட செம்மல் சுரேந்திரனும், சேனாதிபதி கமலாகரரும் திணறிப்போயினார். எங்கு தேடியும் 'பிரதாபனின் விஷயம் ஒன்றுமே புலப்படவில்லை. இவ்வமயம் இளவரசி விஜயாளும் தன்மணவினையைப்பற்றி குறிப்பாக சுரேந்திரனிடம் தெரிவித்தாள். ஆனால் சுரேந்திரனோ அவள் குறிப்பை உணராதவனே போலிருந்துவிட்டான். ஒருநாள் இவ்விஷயங்களைப்பற்றி மிக்க மர்மமாய் சுரேந்திரனும் கமலாகரரும் உரையாடிக் கொண்டிருந்தனர். சுரேந்திரன் சேனாதிபதியை விளித்து. "சேனாபதியவர்களே, தாங்கள் என்னைப் பெரிய தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டுவிட்டீர்கள். எனக்கு என்ன செய்வதென்பதே தெரியவில்லை. ஒருபுறம் குடிமக்களும் ஏனையோரும் விஜயாளை அரசியாகக் காண பெரிதும் விரும்புகின்றனர். மற்றொரு புறம் இளவரசி விஜயாள் அளப்பரிய அன்போடு நேசிக்கின்றாள்; அவளுக்கு நான் ஏதும் தகுந்த மறுமொழியளியாமையான், என்பேரில் வருத்தத்தோடிருக்கின்றாள். இவைகட்கெல்லாம் தாங்கள் தான் ஒரு தகுந்த யோசனை கூறவேண்டும்" என்று வருத்தத்தோடு கூறினான். "தன்னலங்கருதா பிறர்க்குரியாள! நின்னைப்போன்றே யானும் ஏதுமறியாது தயங்குகின்றேன். ஆயினும் இதற்கு முடிவாய் ஓர் யோசனைக் கூறுகின்றேன். இன்னும் மூன்று மாதங்கள் வரையிலும் நம்மால் இயன்ற அளவு முயன்று அரசர்பிரதாபனைத் தேடிப்பார்ப்போம். அங்ஙனம் நாம் முயன்று அவர் அகப்படாவிடின், இளவரசியை நீ மணந்து |